Tuesday, March 23, 2010

வீர வணக்கம்

வீர வணக்கம்



மானத்துடன் வாழ்ந்து நாட்டிற்காக போராடி கொண்ட கொள்கைக்காக இதே நாளில் 1931 ஆம் ஆண்டு உயிர் நீத்த மாவீரர்கள் பகத் சிங் , ராஜ குரு , சுகதேவ் ஆகியோருக்கு வீர வணக்கம்

Friday, March 5, 2010

அவள் பெயர் தமிழரசி - ஒரு பார்வை

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய் , நந்தகி , கஞ்சா கருப்பு நடிப்பில் வெளி வந்து இருக்கும் "அவள் பெயர் தமிழரசி " திரைப்படம் பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் கூத்தில் ஆரம்பித்து அந்த கூத்தில் வரும் தமிழரசியான "நந்தகியை" அந்த ஊரின் பணக்கார சிறுவன் "ஜோதி முருகன் " என்னும் ஜெய்க்கு பிடித்து விட அவன் தன் தாத்தாவிடம் சொல்லி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அதே ஊரில் தங்க வைக்கிறான் . இருவரும் பள்ளி படிப்பு முடியும் வரை இணை பிரியா சேக்களிகளாக அந்த ஊரை வலம் வருகிறார்கள் . பள்ளி இறுதி படிப்பில் அதிக மதிப்பெண் பெரும் நந்தகி மேல் படிப்பிற்காக வெளியூர் செல்ல இருக்கும் வேளையில் நந்தகியை பிரிய மனம் இல்லாத பள்ளி இறுதி தேர்வில் தவறிய ஜெய் செய்யும் ஒரு தவறால் நந்தகியை பிரிய நேர்கிறது . நந்தகியை தேடி அலையும் ஜெய் இறுதியில் நந்தகியை கண்டுபிடிக்க முயல்வதுதான் கதை .

படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது . கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஆரம்பித்து இளவட்டங்களின் வாழ்க்கை வரை தெளிவாகவும் சுவாரசியம் குறையாமலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது . இந்த முதல் பாதியில் அழிந்து போகும் நிலையிலும் அதனை காப்பாற்ற தன் வயிற்றை காப்பாற்ற மறந்து வறுமையில் உழலும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்து உள்ளது .


படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஜெய் நந்தகியை தேடி அலையும் காட்சிகள் தான் பெரும்பாலும் . ஆனால் இந்த பாதி மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த தவறிவிட்டது . அப்படி ஏற்படுத்தி இருந்தால் இந்த படம் மிக மிகச் சிறந்த படங்களின் வரிசையில் அமர்ந்து இருக்கும் .

படத்தில் பிடித்தமான விடயங்கள்

கதையில் வரும் நடிகர்களின் தேர்வும் அவர்களின் பேச்சு வழக்கும் .கதை நெல்லை மாவட்ட சூழலில் நடை பெறுவதால் நெல்லை பேச்சு வழக்கு அழகாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக படங்களில் நெல்லை பேச்சு வழக்கு அவ்வளவு சிறப்பாக பயன்படுத்தப்பட்டது இல்லை .

சிறுவர்கள் வரும் காட்சிகள் இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் மிகவும் சுவாரசியம் உள்ளதாக அமைந்து வருகின்றன . அந்த வரிசையில் இந்த படத்தின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும்சுவாரசியம்

மதிய உணவிற்காக தமிழரசி மற்றும் அவள் தம்பி பள்ளி கூடம் செல்லும் காட்சி கர்ம வீரரை மனதில் இருத்தி சென்றது . நந்தகி வகுப்பில் தூங்கும் காட்சி ஒரு குறும்பட கரு .

கூத்து கலைக்கு போட்டியாக வரும் அந்த கிராமத்திற்கு வரும் circus எப்படி கூத்து கலையையும் கலைஞர்களின் வாழ்கையும் விவரிக்கும் காட்சி அருமை . கூத்து மேளத்தை தட்டி கொண்டு தாத்தாவும் பேத்தியும் தானிய வசூலுக்கு செல்லும் காட்சியில் பின்னணியில் circus அறிவிப்பு ஒலிக்கும் காட்சியில் இயக்குனர் தெரிகிறார் .

கூத்தின் இறுதி நாள் மழை பெய்யும் என்பது நம்பிக்கை . அந்த நம்பிக்கை நடக்குமா என்று கூத்து நடத்தும் தாத்தா வானம் பார்த்து கூத்து முடித்து உட்கார்ந்து இருக்கும் காட்சி நெகிழ்ச்சி .

ஜோதிமுருகனின் தாத்தா , தமிழரசியின் தாத்தா , தமிழரசியின் தம்பி கதாபாத்திரங்களை ஏற்றவர்களின் நடிப்பு மிகவும் அருமை .

ஜோதி முருகனிடமே யார் தவறு செய்தது என்று தமிழரசியின் அம்மா கேட்கும் காட்சியில் வசனமே இல்லாத காட்சி அமைப்பு ஒளிப்பதிவின் முக்கியத்தை உணர்த்துகிறது .

ஜோதி முருகனின் தவறுக்கு அவனை தமிழரசியின் தம்பி அடிக்கும் காட்சி பாசத்தின் உச்சகட்ட உக்கிரம் .

கஞ்சா கருப்பின் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுணக்கம் இல்லாமல் கொண்டு செல்ல மிகவும் உதவி உள்ளது ,

முதல் பாதியில் வரும் பின்னணி இசை கிராமிய சுழலுக்கு மிகவும் பொருத்தம் .. பின்னணி இசையுடன் ஒளிப்பதிவும் சேர்ந்து காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது .

ஆக மொத்தம் படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும் ,இரண்டாம் பாதி எந்த ஒரு பாதிப்பும் இன்றி உள்ளது. ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம் முதல் பாதிக்காக .

இந்த மாதிரி ஒரு கதையை கொண்டு தன் முதல் படத்திலயே அழிந்து வரும் தோல் பாவை கூத்தை பதிவு செய்த இயக்குனர் மீரா கதிரவன் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர் . இவர் கண்டிப்பாக தமிழ் திரை உலகிற்கு வன்முறை , ஆபாசங்கள் இல்லாத நல்ல படங்களை வரும்காலத்தில் கொடுப்பார் என்பது நிச்சயம் .


படம் பார்த்து விட்டு வரும்போது ஏனோ அழிந்து வரும் மற்றுமொரு கிராமிய கலையான "வில்லு பாட்டு" ஞாபகம் வந்தது இயக்குனரின் வெற்றியே .

தன் சுயத்தை இழக்க மறுத்து கலைக்காக வாழ்வது வறுமையை தான் கொண்டு வருகிறது . தன் சுயத்தை இழத்தல்தான் கலைஞர்களை வலியது வாழும் தத்துவத்தின் கீழ் உலகம் ஏற்றும் கொள்ளும் என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான் .