Monday, July 28, 2008

எரிபொருள் விலையும் அதன் சூட்சுமமும்


அமெரிக்க மாட்டுத் தொழுவத்தில் அரேபிய ஒட்டகங்கள் : கரிகாலன்
--------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் தொடர்ச்சியாக, மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். சரக்கு லாரிகளின் கட்டணம் கி.மீ.க்கு ரூ. 2 ஏற்கெனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டாயம் உயரும். ஒரு வேளை சோற்றுக்குத் திண்டாடும் ஏழைகளின் நிலைமை, எழுந்து வெளியே வர முடியாத அளவுக்கு படுபாதாளத்தில் விழுந்துவிடும். கச்சா எண்ணெய் விலை உயர்வு நெருக்கடியை, பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு விளக்க முடியாது, தீர்வும் காண முடியாது. ஏனென்றால் உலகில் கொழுந்துவிட்டு எரியும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் சர்வதேச போலீஸ்காரரான அமெரிக்காதான், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் காரணம். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் விபரீத விளையாட்டு இந்த முறை எண்ணெய் வர்த்தகத்தில் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் ஜார்ஜ் புஷ் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். அதில் மிகப் பெரியது, அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி. அமெரிக்க பொருளாதார கட்டமைப்பில் உள்ள பலவீனத்தால் டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ந்து வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பைத் தக்க வைக்க வட்டிவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் அமெரிக்க அரசு விழித்தது. அந்நாட்டை நம்பியிருக்கும் வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளும் திணறிப் போயின.இப்படி நெருக்கடியில் சிக்கி விழி பிதுங்கியிருந்த அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குப் பிறகு வன்மத்துடன் சிரிக்கிறது.

இந்த வன்மத்துக்குப் பின்னணியில் காரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க முதலீட்டுத் துறை ரொக்கப் பணம் மற்றும் பங்குச்சந்தையில் கவனம் செலுத்தாமல் வணிகப் பொருள் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. 2003ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 20 மடங்கு அதிகமாக வணிகப் பொருள் சந்தையில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் 26000 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை, இழப்பு ஏற்படாத மற்றும் ஓய்வூதிய நிதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்த முதலீடுகள் ஆபத்தானவைதான் என்றாலும், பெரும் லாபம் ஈட்டித்தரக் கூடியவையும்கூட.எதிர்கால சந்தையில் இந்த முதலீடுகள் 50000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடியவை. இந்த முதலீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை கச்சா எண்ணெயில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என்பதுதான், கொள்ளை லாபம் கிடைப்பதற்குக் காரணம். ஓர் இடத்தில் ஒரு பொருளின் தேவை அதிரித்து, அதற்கேற்றவாறு கையிருப்பும் இருந்தால் பொருளின் விலை நிலையாக இருக்கும். ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்து, கையிருப்பு குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும். அதேநேரம் ஒரு பொருளின் தேவையைவிட, கையிருப்பு அதிகமாக இருந்தால் பொருளின் விலை குறையும். இதை கையிருப்பும் தேவையும் சமன்பாடு என்கிறார்கள். இது ஓர் அடிப்படை பொருளாதார விதி.ஆனால் கச்சா எண்ணெய் விலையில் கையிருப்பும் தேவையும் சமன்பாட்டுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால் இங்கு கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிப்பவர்கள் உற்பத்தியாளர்கள் அல்ல என்பதுதான் விஷயமே.

கச்சா எண்ணெயை பெருமளவு துரப்பணம் (உற்பத்தி) செய்யும் எண்ணெய் வள நாடுகளில் கச்சா எண்ணெய் சந்தை அமையவில்லை, அந்நாட்டு ரொக்கப் பண மதிப்பிலும் அவை குறிக்கப்படுவதில்லை. கச்சா எண்ணெய் விலை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் (OPEC)கால் முதல்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டாலும், அதன் இயக்குவிசை வேறு இடத்தில் இருக்கிறது.சர்வதேச அளவில் நியூயார்க்கிலும், லண்டனிலும்தான் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் மதிப்பு எப்பொழுதுமே அமெரிக்க டாலர் மதிப்பில்தான் குறிப்பிடப்படுகிறது. (கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உலகெங்கும் கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களையே கொடுக்கிறார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்கிறது. விலை எவ்வளவு உயருகிறதோ அவ்வளவு அமெரிக்க டாலர்கள் கைமாறும்).சுருக்கமாகச் சொல்வதென்றால் கச்சா எண்ணெய் விலை நியூயார்க்கில் உள்ள வால் ஸ்டிரீட்டில் நிர்ணயிக்கப்படுகிறது. யூக வணிகம் செய்யும் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன. தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு எண்ணெய் வணிக நிறுவனங்களாக மாறிய நான்கு ஐரோப்பிய அமெரிக்க நிதி நிறுவனங்களே காரணம். கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டேன்லி ஆகியவையே அந்த நிறுவனங்கள்.இந்த யூக வணிக நிறுவனங்களிடம் எண்ணெய் வயல்கள் எதுவும் இல்லை. அவர்கள் கச்சா எண்ணெயைî சுத்திகரிக்கவும் இல்லை. எதிர்காலச் சந்தையில் விற்கப்படவுள்ள ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் மீதும் அவர்கள் முதலீடு செய்கிறார்கள், பிறகு ஒப்பந்த காலம் முடிவதற்குள் வேறு யாருக்காவது விற்றுவிடுகிறார்கள். எதிர்கால கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதால், கச்சா எண்ணெய்க்கு போலியாக அதிக தேவை உருவாக்கப்படுகிறது. இதனால் நடப்புச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. யூக வணிக நிறுவனங்களது ரொக்கக் கிடங்கின் அளவு அதிகரிக்கிறது.

இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர் என்றால், அதில் 100 டாலர் விலை உயர்வுக்கு இந்த யூக வணிக நிறுவனங்களே காÃணம்.எதிர்கால கச்சா எண்ணெய் விலை மீது யூக வணிக நிறுவனங்கள் செய்யும் முதலீடு, எப்படி தற்போதைய எண்ணெய் விலையை நிர்ணயிக்க முடியும், இது சாத்தியமான ஒன்றா என்று பார்த்தால் கச்சா எண்ணெய் சந்தை பெருமளவு நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதாவது கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தால்கூட, அதன் நுகர்வு கிஞ்சித்தும் குறையப் போவதில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.உலக அளவில் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய்த் தேவை 8.5 கோடி பேரல்களில் இருந்து பெருமளவு மாற்றம் ஏற்படவில்லை. உலக அளவில் ஆண்டுக்கு 34 சதவிகிதம்தான் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கிறது. ஆனால் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. (தற்போதைய அதிகரிப்பு இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை). கடந்த மூன்று ஆண்டுகளில் கச்சா எண்ணெயை வாங்குவதற்காக உலக நாடுகள் 30000 கோடி அமெரிக்க டாலர்களை கூடுதலாகச் செலவழித்துள்ளன. இந்த விலை உயர்வால் லாபமடைந்தது யூக வணிக நிறுவனங்கள் மட்டுமே.நியூயார்க்கில் உட்கார்ந்திருக்கும் இந்த பசையுள்ள நிறுவனங்கள் உலக கையிருப்புதேவை இடைவெளியை கைசொடுக்கும் நேரத்துக்குள் மாற்றுவதால், கச்சா எண்ணெய் விலை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை விரைவில் 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் மூலதன நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் யூக வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனம் என்பதை சொல்லத் தேவையில்லை.கச்சா எண்ணெயின் விண்ணை முட்டும் விலை உயர்வுக்கு யூக வணிகமும், அதைச் சார்ந்து இயங்கும் அமெரிக்க அரசியல் ஆதிக்கமும்தான் காரணம்.

முதலில் உயிரி எரிபொருளை பெருமளவு பயன்படுத்தத் தொடங்கி, உலகளவில் உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கியது அமெரிக்கா. தற்போது டாலர் விலை வீழ்ச்சியையும், சரிந்துவிட்ட பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்த கச்சா எண்ணெய் விலையை திட்டமிட்டு உயர்த்தி வருகிறது. யூக வணிக நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு பின்னணியில் இருந்து அமெரிக்க அரசு செயல்படுகிறது.இந்த கச்சா எண்ணை விலை உயர்வு இந்தியாவில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. நாகரிக வாழ்க்கை எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சமையல், போக்குவரத்துக்கு எல்லா குடும்பங்களும் மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றையே பெரும்பாலும் நம்பியுள்ளன.இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, இந்தியாவில் டீசலின் விலை பெட்ரோலின் விலையைவிட 25 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலையைவிட டீசலின் விலை 20 சதவிகிதம் அதிகம். இது பெரும் முறைகேடு. மீனவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளில் டீசல் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் டீசலை பெருமளவு பயன்படுத்துவது யார்? கார்கள், சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகள், தனியார் தொழிற்சாலைகள்தான். எவ்வளவு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்தாலும், டீசலின் விலை உயர்வு மட்டும் குறைவாகவே இருக்கிறது. இந்திய அரசு கச்சா எண்ணெய் பொருட்களுக்கு ரூ. 225,000 கோடி மானியம் வழங்குவதாக குறிப்பிடுகிறது. ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணெய்க்கு பெரும் மானியம் வழங்குவதாகவும், எரிபொருள் விலையேற்றத்தின்போது மண்ணெண்ணெயில் கைவைக்கப்படுவதில்லை என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறது.ஆனால் உண்மை என்ன? மண்ணெண்ணெய்க்கு தற்போது வரை 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கப்படுவதாக பொதுப்புத்தியில் பதிந்து போயுள்ள கருத்து ஓர் அப்பட்டமான பொய்.

கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 80 அமெரிக்க டாலர்களுக்கு விற்றபோது இந்திய அரசுக்கு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 91,000 கோடி வருவாய் கிடைத்தது. இந்தப் பணத்தை நம்பித்தான் இந்திய அரசின் பட்ஜெட்டே உள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்போது, அரசு வழங்கும் மானியம் ரூ. 25,000 கோடிதான் (இரண்டையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). சுருக்கமாகச் சொல்வதென்றால், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 1 அமெரிக்க டாலர் விலை உயர்ந்தால், இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ஆண்டுக்கு ரூ. 3000 கோடி செலவு அதிகரிக்கும்.)இதை இப்படி எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 100 என வைத்துக் கொள்வோம். இதில் ரூ. 50 வரி (கச்சா எண்ணெய் மீது 4 சதவிகிதம் இறக்குமதி வரி, பெட்ரோலியப் பொருட்கள் மீது 33 சதவிகிதம் ஆயத்தீர்வை ஆகிய இரண்டும் மத்திய அரசு விதிப்பது, 17 சதவிகிதம் விற்பனை வரி மாநில அரசால் விதிக்கப்படுவது), பிறகு ரூ. 25 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரூ. 25 மானியத்தைப் பற்றி மட்டுமே இந்திய அரசு மீண்டும் மீண்டும் பேசுகிறது. அதைவிட அதிகமாக விதிக்கப்படும் வரியைப் பற்றி வாயே திறப்பதில்லை.

இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கையை சுருக்கமாக இப்படிக் கூறலாம். 1. கச்சா எண்ணெய்க்கு முதலில் பெரும் வரி விதிப்பது. 2. பிறகு அதற்கு ஓரளவு மானியம் வழங்கி குறைந்த விலையில் விற்கப்படுவது போல ஒரு மாயையை உருவாக்குவது. 3. இது போதாது என்று, இரண்டுக்கும் இடையே வரும் வேறுபாட்டுத் தொகையை ஈடுகட்ட எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது. இதுவே அரசு தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறை. இப்படியாக இந்திய அரசின் எண்ணெய் கொள்கை வெளிப்படைத்தன்மையின்றி இருக்கிறது.இந்த சூழ்நிலையில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது கடினம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் பாதிக்கப்படப்போவது பெட்ரோல், டீசலையே பயன்படுத்தாத ஏழைகள்தான். இவ்வாறு அரேபிய எண்ணைக் கிணறுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு எங்கோ தொலை தூரத்தில் உள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் அதனால் பொருளாதார கணக்குகள் மாறுகின்றன.முன்பு கிராமப்புறங்களில் ஒரு பாடல் இருந்தது.ஊரான் ஊரான் தோட்டத்திலேஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லிகாயிதம் போட்டான் வெள்ளைக்காரன்என்று இருந்தது.

தற்பொழுது 21ம் நூற்றாண்டல்லவா. பாடல் மாறிவிட்டது. வெள்ளைக்காரனுக்கு பதில் அமெரிக்காகாரன் வந்துவிட்டான். வெள்ளரிக்காய்க்கு பதில் கச்சா எண்ணெய் வந்துவிட்டது. ஆனால் கொள்ளை விலை.உள்நாட்டு பகாசுரர்கள்கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி நியூயார்க் வால் ஸ்டிரீட்டில் உள்ள யூக வணிக நிறுவனங்கள் பெரும் லாபமடைவது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை குவித்து வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் செய்யும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன்ஸ் ஆகியவை அறிவுக்கூர்மையாலோ, போட்டியிடும் திறன் மிகுந்த வியாபார அணுகுமுறையையோ பயன்படுத்தாமல் கொள்ளை லாபத்தை அள்ளி வருகின்றன. கச்சா எண்ணெய் விலைஉயர்வின்போது ஒரு துரும்பைக்கூட இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் நகர்த்தாமல் லாபம் அடைந்து வருகின்றன. இப்படி குருட்டு அதிர்ஷ்டத்தால் அந்நிறுவனங்களுக்கு கோடிகள் கிடைப்பதற்கு ஏதுவாக, அரசின் கொள்கையில் திட்டமிட்டு ஓட்டை விடப்பட்டுள்ளது.‘புதிய எண்ணெய் துரப்பண உரிமக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்கள் எண்ணெய் துரப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் எந்த கூடுதல் வேலையும் செய்யாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற்று வருகின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. திவாலாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்த நிறுவனங்கள்தான் இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்து வருகின்றன.ஆனால் தனியார் நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க அரசு 15 டாலர் மானியம் வழங்குகிறது.

எடுத்துக்காட்டுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 2007 கடைசி காலாண்டில் லாப விகிதம் 26 சதவிகிதம் அதிகரித்தது. தற்போதைய விலையேற்றம் நடைமுறைக்கு வரும் முன்னரே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதன் லாப விகிதம் 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இப்படி இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கை பொதுத் துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கச்சா எண்ணெய்க்கு மானியம் வழங்குவதில் எந்த வகையிலும் பங்காற்றாத தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்நிறுவனங்களது ஒப்பந்தங்களைப் புதுப்பித்து கூடுதல் பணத்தைô பறிமுதல் செய்தால், அரசுக்குô பெருமளவு பணம் கிடைக்கும்.சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் ‘விலை உயர்வைச் சமாளிக்க’ என்ற சாக்குடன், மக்களின் தலையில் இடியை இறக்கும் அரசு, தனியார் நிறுவனங்களின் குருட்டு அதிர்ஷ்ட லாபத்தில் கைவைக்க இன்று வரை தயங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக பொருளாதார பேராசிரியர் வி.பி. ஆத்ரேயாவின் நேர்காணல்நேர்காணல்: சரவணவேல்தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன? கடைசியாக 1970களில் 73லும், 78லும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவில்லை. அது உண்மைதான். இந்த விலை உயர்வுக்கு வளைகுடா நாடுகளை குற்றம் சொல்லக்கூடாது. உற்பத்தி & தேவை இடையிலான சமன்பாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தற்போதைய கச்சா எண்ணெய் விலைஉயர்வு ஏற்படவில்லை. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் நடைபெறும் யூக வணிகத்தால்தான் தற்போதைய விலைஉயர்வு எற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஆங்கில முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுகின்றன.கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும், அமெரிக்காவும் உள்ள தொடர்பின் பின்னணி என்ன?கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் தான் புழங்குகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த வர்த்தகத்தில் யூரோ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இதனால் எண்ணெய் வள நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு யூரோ பவுண்டுகளாக மாறுகிறது. டாலர் விலை வீழ்ச்சி அடைகிறது. இதனால் அச்சமடைந்த அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கச்சா எண்ணெய் விலை உயர அமெரிக்கா காரணமாக இருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகள் உற்பத்தி செய்யும் எந்தப் பொருளின் விலை உயர்ந்தாலும், உடனடியாக வளர்ந்த நாடுகள் அதை செயற்கை முறையில் தயாரிக்கத் தொடங்கிவிடுகின்றன. ரப்பர் விலை உயர்ந்தபோது, செயற்கை ரப்பர் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில்தான் மூன்றாம் உலக நாடுகளின் கையில் உள்ள கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிபொருள் தயாரிப்பில் கவனம் திருப்பப்பட்டது. அமெரிக்காவில் 20 சதவிகித மக்காச்சோளம், பிரேசிலில் 50 சதவிகித கரும்பு உற்பத்தி, ஐரோப்பாவில் தாவர எண்ணெய் போன்றவை உயிரி எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உயிரி எரிபொருளை அமெரிக்கா பெருமளவு பயன்படுத்த ஆரம்பித்ததால், உணவுப் பொருள் விலைஉயர்வு ஏற்பட்டது.உணவு உற்பத்திக்குô பயன்படும் நிலம் மாற்றுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். தற்போது இதன் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்த அமெரிக்க துடிப்பாக இருப்பது ஏன்?அமெரிக்க அரசு எண்ணெய் வளத்தை கையகப்படுத்த எப்போதுமே குறியாக இருந்து வந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் அமெரிக்க பெருமுதலாளிகள் கட்டுப்படுத்தும் எண்ணெய், எரிவாயு சார்ந்த பொருளாதாரமே உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்க எப்பொழுதும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு வசதியாக ராணுவ பலம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை அந்நாட்டிடம் உள்ளன.உலகின் போலீஸ்காரராகச் செயல்பட நினைக்கும் அமெரிக்கா அதற்கு நீண்டகாலத் திட்டம் வகுக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உலகிலுள்ள வளங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.

உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மூலம் ஏழை நாடுகளை ஒடுக்கி இதை செயல்படுத்துகிறது.இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?முதலாவதாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்தார்கள். தற்போது இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்¦½ய் விலை ஏறுவதற்கு ஏற்ப, கலால் வரியை அதிகரிக்காமல், ஓர் குறிப்பிட்ட அளவுக்கு கலால் வரியை நிலையான ஒன்றாக நிர்ணயிக்கலாம். அப்படி நிர்ணயித்தால் சர்வதேச சந்தையில் விலை உயர்வதற்கு ஏற்ப இங்கும் விலையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. மதிப்பு சார்ந்த வரிக்கு பதிலாக, நிலையான வரியை நிர்ணயிக்க வேண்டும்.மூன்றாவதாக, இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், எஸ்ஸார், கெயர்ன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்தாலும், சர்வதேச சந்தை விலைக்கே கச்சா எண்ணெயை விற்கின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும்.

இந்த கச்சா எண்ணெய் விலைÔயர்வை ஒட்டி மே மாதம் அமெரிக்க செனட்டில் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவர் ‘நுகர்வோரை முதன்மைப்படுத்தும் எரிசக்தி மசோதா’ ஒன்றை கொண்டு வந்தார். எண்ணெய் வணிகத்தால் லாபம் பெறும் நிறுவனங்கள் திறமையைப் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் இந்த லாபத்தைக் கட்டுப்படுத்த ‘அதிர்ஷ்ட லாப வரி’ (Windfall profit tax) விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மசோதாவைì கொண்டு வந்தார். இங்கு இடதுசாரிகள் முன்வைக்கும் கோரிக்கையை அங்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் முன் வைத்துள்ளார்.இந்தியாவின் வளர்ச்சிக்கு கச்சா எண்ணெய் அவசியத் தேவையா? வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றால் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும்?இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஊசலாட்டமாக இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்தபோது வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சுதந்திரமான, பன்முனை உலகம் உருவாக ஆதரவாக இருப்போம் என்று குறிப்பிட்டதற்கு விரோதமாக, அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையை தற்போது கடைப்பிடித்து வருகிறது.

அமெரிக்காவிடம் ராணுவ ரீதியிலான நீண்டகால உறவுக்குத் தயாராகி வருகிறது. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா ஆட்சியின்போது இதற்கு அடித்தளம் இடப்பட்டது. இந்த சார்புப் போக்கு காரணமாகத்தான், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்கா சென்றபோது ஆடையை அவிழ்த்து நடத்திய சோதனையைக்கூட பிரச்சினையாக்காமல், அடக்கி வாசித்தார்கள்.இந்திய அரசும், பெருமுதலாளி வர்க்க நலன்களை காக்கும் ஒன்றுதான். சோவியத் ரஷ்யா வீழ்ந்த பிறகு, அதற்கு மாற்று சக்திகள் இல்லை என்பதால், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. அமெரிக்காவும் சீனாவுக்கு எதிரான பகடைக்காயாக இந்தியாவை தயார்ப்படுத்தி வருகிறது.அணுசக்தியால் மின்சாரம் கிடைக்கும் என்றாலும், போக்குவரத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு அவசியம். எடுத்துக்காட்டாக, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மத்திய அரசு இதில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. அத்திட்டம் மெதுவாகவே செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் இடுவதில்தான் மத்திய அரசு குறியாக இருக்கிறது. இந்த வகையில் அரசின் அணுகுமுறையில் கோளாறு உள்ளது.

இந்தியாவில் அணுஉலைகளால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி என்பது 2025ம் ஆண்டில்கூட ஒட்டுமொத்த மின்சார தயாரிப்பில் வெறும் 7 சதவிகிதமாகவே இருக்கும். தற்போதுள்ள நிலையில் மின்சார தயாரிப்புக்கு நிலக்கரி, நீர்மின் திட்டங்களை விட்டால் வேறு வழியில்லை. போக்குவரத்துக்கு எண்ணெய், எரிவாயுவே தற்போது அவசியம். நீண்டகாலத்தில் எரிசக்தித் தேவையை சமாளிக்க சூரியசக்தி, காற்றாலைகளைô பயன்படுத்தலாம். இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தகவலுக்கு நன்றி
http://keetru.com/vizhippunarvu/jun08/karikalan.php

அன்புடன் மீன்துள்ளி செந்தில்

Thursday, July 24, 2008

தமிழனின் இட்லியும் ஏகாதிபத்தியமும்

அமெரிக்கா முன்மொழியும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் புவியின் உயிரினங்களை அதீத வன்முறையோடு கையாளும் அமைப்புகளாகும். அறிவியலின் வார்த்தைகளில் வடிவமைப்பில் அமல்படுத்தலில் எங்கும் வன்முறையே. உயிரினங்களுக்கு உடல், மனத்தளவில் செய்யப்படும் இம்சைகள் யாவுமே வன்முறைதான்.அன்பும் நேசமுமற்ற முரட்டுத்தனத்தை அறிவியல்முறை தன்னுள் கொண்டுள்ளது. பொதுவான மனித மதிப்புகளை மீறியது அறிவியலின் அடிப்படை. அறிவியலின் ஆய்வு முறைகளும் புரிதலும் நடைமுறைப் படுத்தப்படும்போது ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்து ஒன்றை மற்றது மோசமாக பலியாக்கிவிடுகின்றது. உயிருள்ள விலங்குகளை அறுத்துப் பார்ப்பது அறிவியல் உண்மையைத் தெரிந்துகொள்ளும் முறைகளில் ஒன்றாக இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.வேறுவிதமாக சொல்வதென்றால் அறிவியல் முறை, முற்றிலும் தனக்கே உரிய மதிப்பீடுகளை மதிப்பீட்டு முறைகளைக் கொண்டுள்ளது. இம்மதிப்பீடு கள் வெளியில் தெரியாமலிருந்ததால் அறிவியல் எதையும் மதிக்க வேண்டியதில்லை என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.தனது முறையே முற்றிலும் நம்பத் தகுந்தது என்றும் அறிவியல் முறை தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறது. அது கூறும் இந்த “உண்மை”கள் எப்படிப்பட்டவை என்பதை ஆராய்கிற போது மர்மமான இருளிடுக்குகளில் ஒளிந்துள்ள மாயைகள் பல வெளிச்சத்திற்கு வருகின்றன. வரலாற்றின் அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கிய தனக்குத்தானே நிறைவு பெறும் எளிய சம்பவம் போன்றதல்ல அறிவியல் உண்மை என்பது. அது கோட்பாட்டின் அடிப்படையிலான படிப்படியான உண்மை. ஒரு குறிப்பிட்ட புரிதலுக்கு ஏற்ப தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள்.ஆய்வு என்பதன் (இதுவே அறிவியல் உண்மைக்கான முக்கிய ஆயுதம்) பிரதான இயல்பு அது வரலாற்றிலிருந்து முற்றாக தொடர்பற்றிருப்பதும் தனக்கென ஒரு சுருங்கிய காலத்தைக் கொண்டிருப்பதும் ஆகும்.

ஒரு ஆய்வை மேற்கொள்ள கிடைத்த விபரங்களை ஒரு குறிப்பிட்ட அனு மானத்தின் அடிப்படையில் சுருக்கவேண்டும். இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியில் சோதிக்கப்பட்டவை அல்ல. இவற்றை ஜனநாயக முறையிலோ பகுத்தறிவுக்கு உட்படுத்தியோ ஒருவரும் ஆராய்வதில்லை. ஒரு அனுமானத்தைவிட மற்றொன்று சிறந்ததாக ஏன் இருக்கவேண்டும் என்பதற்கு பதிலே திருப்திகரமாக இருப்பதில்லை. ஒரு அனுமானம் ஆய்விற்காக அதன் வசதிப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அல்லது அந்த அனுமானம் மற்றவைகளைவிட பலமான புள்ளி விபரங்களை கொண்டதால் ஏற்கப்படுகிறது. வெறும் முடிவுகளை பெறுவதற்கென அதற்கேற்ற அனுமானங்கள் உருவாக்கப்படுகின்றன.


அறிவியல் உண்மை வேறொரு பார்வையில் தன் இயல்புகளை முற்றிலும் துறந்த வரலாற்று நிகழ்வாகவும் இருக்கிறது. அதன் இயல்பு அர்த்தங்கள் அற்ற தாக்கப்பட்டு அதன்மீது செயல்படும் புதிய கருத்து அல்லது தகவல் அதையொத்த மற்றெல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் மயக்கநிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆய்வுக்குப்பின் ஒரு அறிவியல் அனுமானம் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையாக ஏற்கப்பட்டு விடுகிறது. உண்மையின் ஒரே பிரதிநிதி தானே தான் என்று அராஜகமாக மார் தட்டும் நிலைக்கு அறிவியலை இது தரம் தாழ்த்திவிடுகிறது.


அறிவியல் உருவாக்குவது எல்லாம் செயற்கையான உண்மைகள்.அவை அறிவியல் முறையற்ற விதத்தில் திணிக்கப்படும்போது வன்முறையில் முடிகிறது.“நவீன அறிவியல் என்பது சும்மா கற்பனையல்ல என்பது பொய். அது, தான் முன்னனுமானமின்றி செயல்படுவதாகக் காட்டிக் கொள்கிறது. புராதன அறிவை எதிர்த்து முரட்டுத்தனமாக அறிவியலின் விதிகள் மோதுகின்றன. எனவே அறிவியல் அடிப்படையில் மதத்திற்கு எதிரானதாக காட்டப்படுகிறது. ஆனால் அறிவியலே பிறகு தன் மட்டில் ஒரு ஆச்சார மதமாக செயல்படுமளவிற்கு ஆபத்தில் சிக்குகிறது. எல்லா அறிவியல் ஹேஷ்யங்களும் அனுமானங்களுடன் தொடங்குவதால் யதார்த்தத்தை சிதைத்து அதை தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கும் விதமாக ஆக்கிவிடுகின்றன.எனவே நமது புராதன நம்பிக்கைகளை அறிவியல் அழித்துவிட்டதாக தவறாக கருதப்படுகிறது.


உண்மையில் அறிவியல் ஒரு புராதன நம்பிக்கையை மற்றொரு புராதன நம்பிக்கையாக மாற்ற மட்டுமே செய்துள்ளது. இந்த நம்பிக்கையானது ஒரு பெரிய மக்கள் தொகை மீது அணுகுண்டு வீசி அழிப்பதையும் ஒரு அறிவியல் ஆய்வுதான் என்கிறது. உயிருள்ள விலங்குகளின் இருதயத்தை கிழிப்பதும், ஒரே வகை மரங்கள் கொண்ட பெரிய சமுதாயக்காடுகளை முரட்டுத்தனமாக உருவாக்கி சுற்றுச் சூழலுக்கு நிரந்தர பேரழிவை ஏற்படுத்துவதும் கூட ஒருவித சோதனையே என்றும்கூட இது நம்பவைக்கிறது.அறிவியலும் வன்முறையும் எப்படி ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாத அளவிற்கு செயல்படுகிறது என்பதற்கு எனது இந்த விளக்கம் போதுமானதே.அறிவியலை எங்கெல்லாம் அறிமுகம் செய்கிறோமோ அங்கெல்லாம் தவிர்க்கவியலாதபடி மேலும் மேலும் வன்முறையை பலவிதமான வடிவங்களில் அறிமுகம் செய்ய தூண்டப்படுகிறோம் என்ற எனது இரண்டாவது வாதம் வெறும் வார்த்தையல்ல நிரூபணமான உண்மை என்பது புலப்பட்டுவிடும். எனவே வளர்ச்சித் திட்டங்களுக்கு எப்படி அறிவியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது என்கிற அடுத்த வாதத்திற்கு நுழைகிறேன்.1940களிலிருந்தே வளர்ச்சியும் அறிவியலும் குதிரையும் வண்டியும் போல ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. வளர்ச்சி மிகவும் தேவை. ஏனெனில் வளர்ச்சிக்கு முன் எதுவுமே சரியாக இருக்கவில்லை என்று தனது ஆய்வுகள் மூலம் அறிவியல் பறைசாற்றியது.


நவீன அறிவியல், வளர்ச்சியை சாத்தியமாக்கக் கூடியதென்பதால் விரும்பப்பட்டது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நம்பகத்தன்மையை ஏற்படுத்தின. புராதன வாழ்விற்கும் இன்றைய நவீன வாழ்விற்குமிடையில் “வளர்ச்சி” உத்திரவாதம் அளித்த வித்தியாசத்தை அறிவியல் தான் சாதித்தது. அதேசமயம் அறிவியலுக்கு வளர்ச்சி ஒரு அசைக்கமுடியாத முன்னேற்றப் பாதைக்கு உத்திரவாதம் அளித்தது.நவீன அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு, காலனித்துவ காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களது சுரண்டலுக்கு ஆதரவாக அறிவியல் திணிக்கப்பட்டபோது தொடங்கியது. ராதிகா ரமாசுபன் “இந்தியாவில் பொதுச் சுகாதாரமும் மருத்துவ ஆராய்ச்சியும்” எனும் ஆய்வில் இதை வரைபட முறையில் நிரூபித்திருக்கிறார்.நவீன அறிவியலின் சில அடிப்படைகள் அதன் தொழிற்புரட்சி அனுபவத்தால் கிடைத்தவை. உதாரணமாக வெப்பமுடுக்கவியலின் இரண்டாம் விதி, நீராவி இயந்திரத்தை மேலும் சரி செய்து தொழிற்துறையை நவீனப்படுத்த முயன்றபோது கிடைத்ததே.இந்திய விஞ்ஞானி சி.வி.சேஷாத்ரி வளர்ச்சியும் வெப்பமுடுக்கவியலும் எனும் கட்டுரையில் இதை விரிவாக ஆராய்ந்து நவீன அறிவியலும் தொழிற் புரட்சியும் எப்படி ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளன என்பதை நிறுவுகிறார்.


மிகவும் ஆர்ந்தாய்ந்த சேஷாத்ரி இரண்டாம் விதி “இனப் பாகுபாட்டை” மையமாக கொண்டது என்பதை கண்டார். அதாவது ஒருநாட்டை பகுதியை தங்கள் வசதிக்கு ஏற்ப கணக்கிடுதல்.இதேபோன்றதொரு கட்டுரையை வி.பாலாஜியோடு சேர்ந்து சேஷாத்ரி எழுதினார். அதில் எண்ட்ரோபி விதி பற்றிய விளக்கம் கவனிக்கத்தக்கது. “தனது அதிகாரத்தின் அடிப்படையில் எண்ட்ரோபி விதி ஒரு பகுதியில் கிடைக்கும் ஆற்றலை அதன் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட வைக்கிறது. இப்பாகுபாடு திறக்கோட்பாடு என்பதாகும். இது எண்ட்ரோபி விதிப்படி உருவான எதேச்சதிகார இணைப்புத்திறனை கணக்கிடும் “நீதிபதி”யின் அந்தஸ்த்தை எடுத்துக்கொண்டதும் இந்த திறன் கணக்கீடு சீரற்றுப் போகிறது. அதீத வெப்பநிலையில் கிடைக்கும் பெட்ரோல், கரி ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை நவீன அறிவியல் தன்கையில் எடுத்துக்கொண்டது. இந்த பார்வையில் எண்ட்ரோபி விதி எரி பொருள், கச்சாப்பொருள் ஒரு இடத்திலிருந்து பெறுவதன் மதிப்பை தரநிர்ணயம் செய்யும் விதிமுறைகளை வகுத்து விட்டது.நவீன அறிவியல் சார்ந்து வளருவதாக காட்டப்படும் உற்பத்தி பொருளாதாரம் தனக்குத்தானே தர நிர்ணயம் வழங்கிக் கொண்டு சட்ட அங்கீகாரம் பெறுவது மட்டுமல்ல - எல்லாப் பகுதிகளின் உயிர் வாழ்விற்கான இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பது தவறல்ல என்கிற முரட்டு முடிவை அறிவித்துக் கொள்ளும் ‘நீதிமான்’ அந்தஸ்தையும் பெறுகிறது.


நவீன அறிவியல் சென்று தொடாத பகுதிகளின் வளங்களையும் சேர்த்தே ‘பயன் படுத்த’ இந்த உற்பத்தி பொருளாதாரம் முயல முடியும்.வெப்பமுடுக்கவியல் சார்ந்து முன் னேற்றத்தின் திறன் அளக்கப்பட்டால் இயற்கையும், மேற்கத்தியமயமாகாத மனிதர்களும் தோற்றுப்போவது உறுதி. இயற்கையும் மேற்கத்திமயமாகாதவர்களும் அதன் அளவுகோள்படி ஒரே இரவில் “வளர்ச்சி அடையாதவர்களாகவும்” வளர்ச்சி குன்றியவர்களாகவும் முத்திரைகுத்தப்பட்டனர். உதாரணமாக வெப்பமுடுக்கவியலின் திறன் அளவுகோள்படி இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் மில்லியன் கணக்கான டன் தண்ணீரால் கொட்டி நிரப்பும் பருவகால கனமழை - அது சராசரி வெப்பநிலையில் நடைபெறுவதால் - எந்த திறனுமில்லாதது.சராசரி புவிவெப்பநிலையில் நடக்கும் எந்த செயலுமே நவீன அறிவியலால் ‘திறனற்ற’தென்றே அளவிடப்படும். மூங்கில் தொழிலாளர், தேனீக்கள், பட்டுப்பூச்சிகள், மலைசாதியினரின் காடுசார் இயற்கை வெப்பநிலையில்- சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத- நீர்மக் கழிவுகள் எதையும் வெளியிடாத செயல்கள் முடக்கப்படுகின்றன. பட்டுக்கு பதில் ரேயான், இதர அதே காட்டுவளங்களை மிக உயர் வெப்ப பாய்லர்களில் இட்டு சுற்றுச்சூழலை மாசடையவைக்கும் புகைச்சலையும் கொதிகலன்களிலிருந்து வயிற்றை குமட்ட வைக்கும் நீர்மக்கழிவையும் வெளியேற்றும் இயந்திரத்தனமான தொழிற்துறையே “வளர்ச்சி”க்கு வழி என்று இந்த வெப்ப முடுக்கவியல் தான் உலகை நம்ப வைத்தது.


“ஆற்றலை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றும்போது சுற்றுப் புற வெப்பத்தைவிட மிகவும் கூடுதலான வெப்பநிலையில் நிகழ்த்தப்படும் ஆற்றல் மாற்றங்களின் போது மட்டுமே, விரயமாகும் ஆற்றலின் அளவு ஆகக்குறைவாக உள்ளது.” இதை வைத்தே நவீன அறிவியல் - நம் முன்னோர்களால் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த அனைத்து புராதன தொழில்களையும் “பேய் ஓட்டுவதுபோல்” ஓட ஓட விரட்டிவிட்டது.இது நம்மை இப்போது எனது இறுதி வாதத்திற்கு இட்டு வந்துவிட்டது. நவீன அறிவியல் சார்ந்த “வளர்ச்சி” நமது காலத்தின் மனித உரிமைகளுக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தல் ஆகும்.


பண்டைய புராதனமுறைப்படி வாழும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நவீன அறிவியலின் பயன்கள் உடனே பெரிய அளவில் தெரியவில்லை. தம் அன்றாட வாழ்வை பிரச்னைகளின்றி ஓட்டிக் கொள்ள அப்போது “வளர்ச்சி”யும் தடங்கலாக இல்லை. இவை குறித்த எந்த தொடர்புமின்றி வாழ்ந்துவந்த அவர்கள் மீது “வளர்ச்சியை” திணிக்க அரசின் ஆயுதபலத்திலிருந்து சட்டமும் கையிலெடுக்கப்பட்டது. தெற்கே நவீன அரசுகள் திடீரென நாட்டையும் மக்களையும் நவீன காலத்திற்கு ‘இழுத்து’ வருவதென முடிவு செய்து விட்டன. உண்மையான அர்த்தத்தில், அம்மக்கள் “வளர்ச்சியில்” வெற்றியடைந்த மேற்கத்தியர் போலவே அச்சாக உருமாற்றம் பெற்றுவிட வேண்டும். “வளர்ச்சி”யின் நன்மைகளை புரிந்துகொள்ள முடியவில்லையானால் அவர்கள் “சுதந்திரமானவர்கள்” ஆகிவிடுமாறு மிரட்டி பணிய வைக்கப்படுவார்கள்.இப்படி வளர்ச்சிக்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான ஆத்மார்த்த தொடர்பு நவீன அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அரசின் “வளர்ச்சி” குறித்த கட்டுப்பாடு - நவீன அறிவியல் மீதான கட்டுப்பாட்டிலிருந்து துளிர்த்ததே. அரசுக்கு நவீன அறிவியலே சிறந்த மாற்றாகப்பட்டது. ஏனெனில் அது புதிய கோட்பாடுகள், விதிகளில் ஏற்கனவே இருந்த யதார்த்தத்தை மாற வைத்தது. அது பொருட்கள் எப்படி இருக்கவேண்டும், எப்படி வேலை செய்யவேண்டும் என்பதற்கான புதிய அறிவையும் புரிதலையும் கொண்டு வந்தது. “வளர்ச்சி”யை எப்படியேனும் கொண்டுவரும் வெறியோடு தன்னையே ஒரு தொழிற்சாலையாகப் பார்த்த அரசுக்கு, தன்னை எல்லாவிதத்திலும் சர்வ அதிகாரங்களோடு நிலை நாட்டிக் கொள்ள கச்சிதமான ஜோடியாக நவீன அறிவியல் அமைந்து போனது.இந்த நவீன அரசு “வளர்ச்சியடைய முடியாது” என்று சொல்ல ஒருவருக்கு உரிமையுண்டு என்பதை புரிந்து கொள்வதில்லை.


மக்களை வளர்ச்சியுற வைக்க தனக்கு உரிமை உள்ளதென்று பறைசாற்றிக் கொண்டு நவீன அறிவியல் கொடுத்த பார்வை, திட்டங்களின்படி இயற்கையையும் மக்களையும் “வளர்ச்சி” அடைய வைக்க அரசு முழுமூச்சோடு சர்வ அதிகாரங்களையும் செலுத்துகிறது. இந்த மிகப்பெரிய வீர விளையாட்டில் அங்கம் வகிப்பவர்கள் என்பதைத் தவிர மக்களுக்கு வேறு எந்த பங்களிப்பும் கிடையாது. அங்கம் வகித்ததற்கு மாற்றாக கிடைப்பதோ வளர்ச்சி மற்றும் அறிவியலின் கூட்டுத்தயாரிப்பான நவீனத்துவத்தின் தொழில்நுட்ப சரக்குகள். அவர்கள் அவற்றின் பிரதான ‘உபயோகிப்பாளர்கள்’. அரசின் பார்வையில், தமது உரிமைகளை சமர்ப்பித்ததற்காக மக்களுக்கு கிடைத்துள்ள சரியான நட்ட ஈடுதான் அவை.இந்தியாவின் தற்காலத்திய நவீன அரசு இதற்கு ஒரு முழு உதாரணம். எல்லா மனிதத்துவ வழிகளிலும் முரட்டுத்தனமாக அது “வளர்ச்சியை” திணித்துள்ளது.


கருப்பட்டி வெல்லத்தை ஒழிக்க சர்க்கரை உற்பத்தி, பசுந்தாள் உரம்சார் விவசாயமுறையை புறந்தள்ளி வேதி நச்சு உரங்கள் திணிப்பு, மூலதனம்சார் வெண்மை புரட்சி, அணுமின் திட்டம் முதல் கைராட்டை கைத்தறியை ஒழிக்கும் இயந்திர ஜவுளி உற்பத்தி வரை அனைத்து அம்சங்களிலும் வலுக் கட்டாயமாக புகுத்திவிட்டது.ஒவ்வொரு விஷயத்திலும் அரசு “திறன் குறைந்த ஆற்றல்” தொழில்களை, அதன் அறிவுத்தளத்தையும் புராதன தொழில்நுட்பத்தையும் கிராமிய குடிசைத் தொழிலிலிருந்து நகர் சார்ந்த சிறுதொழில்வரை அனைத்திலும் முடக்கி வீழ்த்திவிட்டு, இயந்திரங்களைக் கொண்ட நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை புகுத்திவிட்டது. முன்பிருந்த சிந்தனைகள், மக்கள், யதார்த்தம், கலாச்சாரம் மற்றும் முறைகளை ஒழித்துவிட்டு அங்கே நவீன அறிவியல் உருகொடுத்த புதிய வகை மதிப்பீடுகளை திணிப்பது என்பதே வளர்ச்சி. ஏறக்குறைய அல்ல மிகக்கச்சிதமாக சொல்வதானால் மேற்குறிப்பிட்டதுதான் வளர்ச்சி.


இனி, நவீன அறிவியல் அன்றாட பயன்பாட்டுப் பொருளாயிருந்த கருப்பட்டி வெல்லம், இட்லி, சப்பாத்தியை எப்படி பாதித்ததென விளக்குகிறேன்.சர்க்கரை, அறிவியல், வளர்ச்சி: அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பது போல காட்டிக்கொள்கிற, இக்கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்குகிற வெள்ளைச் சர்க்கரையைப் பார்ப்போம். அதன்மீது என் கவனம் செல்லக்காரணம் சற்று நேரமே நீடிக்கும் அதன் இனிப்புச்சுவை. அது ஏற்படுத்தும் ஆபத்தான பின்விளைவுகள். அறிவியலின் பிற கண்டுபிடிப்புகள் போலவே அது மனிதன்மீதும் இயற்கை மீதும் பிரயோகிக்கும் வன்முறை.சர்க்கரை நவநாகரீக முத்திரை பதித்த அடையாளங்களில் ஒன்று மட்டுமல்ல சற்றே சமூக உயர் தகுதி நுகர்வுப் பொருளுமாகும். நவீன அறிவியல்சார் உற்பத்தி என்பதாலேயே சர்க்கரை தலைசிறந்ததாக நம்ப வைக்கப்பட்டது. தேசிய இனிப்பான கருப்பட்டி வெல்லம் பழங்கால சமாச்சாரமாக ஒதுக்கப்பட்டது. விவசாய கிராமத்து மூளை சார்ந்ததாக எள்ளி நகையாடப்பட்டது. உயர்வெப்பபொருள் என்பதால் சர்க்கரையே சாலச் சிறந்ததென வழக்கம்போல வெப்ப முடுக்கவியல் சார்ந்து அறிவியல் தனது நம்பிக்கையை வெளியிட்டது.சர்க்கரையின் வெளுப்பான, வெள்ளிப் பளபளப்பிற்கு பின்னே பயன்படுத்துவோரின் உடலிலும் உளவியலிலும் அது ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் மறைந்துள்ளன. சாதாரணமாக சிந்திக்க முடிந்தவர்கள் அதை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டியுள்ளது. மக்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை விதிக்க வேண்டிய அளவிற்கு அது ஒரு நஞ்சு என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால் அது நடைபெறவில்லை.


முதலில் சான்றுகள்: இத்துறையின் அதிகாரப்பூர்வக்குரலான ஜான்யுக்கின் எழுதினார்: யாராலும் மறுக்க முடியாத இரு கருத்துக்களை நான் வெளியிட முடியும். 1. சர்க்கரையை உட்கொள்ள வேண்டிய உடலியல் தேவை எதுவுமில்லை. ஒரு தேக்கரண்டிகூட உட்கொள்ளாமலேயே முழு ஆரோக்கிய மாக வாழ முடியும். 2.சர்க்கரையின் ஆபத்துகள் குறித்து சிறிதளவே அறியப்பட் டுள்ள உண்மைகளை வெளியே கொணர்ந்தால், மற்ற உணவுச்சுவை ஊக்கிகளோடு ஒப்பிடும்போது அது ஏற்படுத்தும் கொடிய விளைவுகளும் புரிய வைக்கப்பட்டால் அதன் விற்பனையும் உற்பத்தியும் தடை செய்யப்படுவது நிச்சயம்”“உணவு, சமூகவியல் மற்றும் மனோவியல் சுகாதார அடிப்படையில் சர்க்கரையை குறித்து” எனும் ஐ.நா. சபை பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆஸ்லோ பல்கலைக்கழக கல்வியாளரான டேக் பொலெஸின்ஸ்கி, மனித உளவியல்மீது சர்க்கரை கொண்டு வரும் சீர்கேடுகள் குறித்த சான்றுகளை தொகுத்துள்ளார். மூளையை பாதிக்கக் கூடிய அளவிற்கான உணவுமுறை வடக்கே பலநாடுகளை பீடித்துள்ளதாகக் கூறும்போது அவர் சர்க்கரையைத் தான் அதிகம் சாடுகிறார்.“... சர்க்கரை பலவகைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது என்பதற்கு சான்றுகள் உள்ளன. உடலின் வைட்டமின் பி , க்ரோமியம் இன்றி சர்க்கரை கரையாது. மேலும் உடலின் கால்சிய சமநிலையை பேரளவில் அது சீர்கேடு அடையச் செய்கிறது. உடல் சீராக இயங்க ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரேமாதிரி இருக்கவேண்டும். சர்க்கரை உட்கொள்வதால் இச்சமநிலை தூண்டப்பட்டு வெளித்தெரியாத மன உளைச்சல், உளவியல் சிதைவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.”சாதாரணமாக இரத்தத்தின் சர்க்கரையை (குளுக்கோஸ்) உடல் நாம் உட்கொள்ளும் காய்கறிகள், பழங்கள், கொழுப்பு, புரதத்திலிருந்து பெறுகிறது. இம்மாதிரி உணவுப் பொருட்கள் சர்க்கரையோடு பிற முக்கிய சத்துக்களையும் உடலுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றன. வெள்ளைச்சர்க்கரை உட்கொள்ளும் போதோ இப்படி நடப்பது இல்லை.


உடலில் வெள்ளைச் சர்க்கரை நுழையும்போது நடப்பதென்ன? ருடெல்ப் பாலண்டைன் எழுதுகிறார்: சரிவிகித உணவியல்படி பார்த்தால் வெள்ளைச் சர்க்கரை உடலில் நுழையும்போது நாம் உடனடியாக கடனாளி ஆக்கப்படுகிறோம். உடல் சர்க்கரையோடு வைட்டமின்கள், கொழுப்பு, புரதம் , நார்ச்சத்தையும் சேர்த்து உட்கிரகித்தே வந்துள்ளது. நமக்கு வேண் டிய கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டுமே சர்க்கரையில் உள்ளதால் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்கிறோமோ அந்தளவுக்கு மற்ற சத்துக்களையும் உட்கொண்டாகும் கட்டாயம் உடலுக்கு ஏற்படுகிறது. சர்க்கரையை உடலில் கரைப்பதானது மற்ற சத்துக்களையும் சேர்த்தே கரைப்பது என்பதாவதால், சர்க்கரையை ஆக்ஸிஜனேற்றம் செய்து எரித்துக் கரைக்க வைட்டமின் முதல் புரதம்,கொழுப்பு மூலக்கூறுகளும் சேர்ந்தே தேவைப்படுகின்றன.
இதற்கு மேலும் நச்சு இயல் நிபுணர்கள் இருவர் உடலின் சர்க்கரை மீதான எதிர் வினை குறித்து இன்னும் தெளிவாக விவரிக்கின்றனர்: “ஆர்கலீன், அமிலச் சரிவிகிதத்தை ரத்தத்தில் தொடர்ந்து இருக்க வைத்திட உடலியல் இயங்கு அமைப்பு சோடியம், பொட்டாசியம், மெக்னீசியத்தை உடலின் பல பகுதிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. தவிர வயிற்றில் சர்க்கரை சேருவதால் உடனடியாக க்ளுடமிக் அமிலமும் வைட்டமின் பி சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. சர்க்கரை தன்னுடன் கொண்டு வந்த கார்போஹைட்ரேட் முழுமையாக கரையாமல் லாக்டிக் அமிலம் போன்றவற்றை உபரிப்பொருட்களாக கலக்கச் செய்கிறது. இவை நஞ்சாகி மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் கலக்கின்றன. இதனால் ஆக்ஸிஜன் செல்கள் அழிக்கப்பட்டு உடல் எதிர்ப்பு சக்தியை இழந்து நோய்வாய்ப்படும்படி ஆகிறது”எவ்வடிவில் உட்கொண்டாலும், வெள்ளைச் சர்க்கரை உடல்ரீதியான செயல்பாடுகளோடு இணையும்போது அதற்கு வைட்டமின்கள், கொழுப்பு, புரதம், கனிமச்சத்துகள் குறைந்துவிடுகின்றன. சர்க்கரை அப்போது உடலிலுள்ள திசுக்களிடமிருந்து இச்சத்துக்களைப் பெற வழிப்பறியில் இறங்குகிறது. மேலும், சர்க்கரையை நாம் பிரதான உணவாக உட்கொள்ளும் ஒரே கலோரி சத்தாக ஆக்கிடும் பட்சத்தில் (பலருடைய விஷயத்தில் இதுதான் உண்மை) நாம் நம் உடலிலிருந்து மேற் கண்ட சத்துக்களை வழிப்பறி செய்வது மட்டுமல்ல - இச்சத்துக்களோடு மற்ற அத்தியாவசிய தேவையான அளவு உட்கொள்ள முடியாத அமிலத்தன்மையையும் ஏற்படுத்திவிடுகிறோம்”ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரான நிலையை இழந்து அதிகமாகவோ ஆகக்குறைவாகவோ ஏற்ற இறக்க நிலையை அடைந்துவிடுகிறது. இதன் விளைவு நீரிழிவு நோய் (டயாபடீஸ்).


இப்போது தொழில்மயமான நாடுகளில் இந்த நோயாளிகள் எண்ணிக்கை திடீரென 30 சதம் கூடுதலானதற்கு வெள்ளை சர்க்கரையை கூடுதலாக உட்கொண்டதே காரணம். சர்க்கரை உட்கொள்வோருக்கு சோர்வு, நடுக்கம், மன உளைச்சல், அளவு கடந்த ஆத்திரம், மேலும் மேலும் இனிப்பு உண்ணும் பேராவல், மது அருந்துவது, கவனச் சிதைவு, தோல் அரிப்பு மற்றும் குறை இரத்த அழுத்தம் போன்ற மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் பின்விளைவுகள் சர்வசாதாரணமாக ஏற்படுகின்றன. இத்தகு அறிகுறிகள் வைட்டமின்கள், கனிமச்சத்து குறிப்பாக வைட்டமின் பி வகை சத்துக்கள் சிதைந்து குறைந்து விட்டதையே காட்டுகின்றன.சர்க்கரை மூலக்கூறுகளை தூளாக்க உடலுக்கு கால்சியம் தேவை. பலவகை சுற்றுச்சூழல் நச்சுகளிலிருந்து உடலை காப்பாற்றுவதும் கால்சியம் இருப்பே ஆகும். குறிப்பாக தாமிரம், கேடியம் தொடர்பான நச்சாக்கத்திலிருந்து முழு பாதுகாப்பு கால்சியத்தால் வருவதே ஆகும்.
பொலெஸின்ஸ்கி தனது ஆய்வகத்தில் இளம் முயல்குட்டிகளுக்கு உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 2-4 கிராம் சர்க்கரையை உட்கொள்ளவைத்து (பொதுவாக குழந்தைகள் தம்முடலின் 20-30 கிலோ எடைக்கு நாளொன்றிற்கு 40-60 கிராம் சர்க்கரையை பல வடிவங்களில் உட்கொள்கின்றன) ஆய்ந்து 146 நாட்கள் கண்காணித்து கீழ்கண்ட முடிவுகளை அடைந்தார்: “உடலியல் மாறுபாடுகள் பல முயல் குட்டிகளின் எலும்பு அமைப்புகளில் முதலில் காணக் கிடைத்தன. எலும்பு மிருதுவாதல், வளைதல், முறிவு, விரிசல், இப்படி... எலும்பு மிகவும் வலிமை குன்றிய ஒருவரால் சாதாரணக் கத்தி கொண்டு நறுக்க முடிந்த அளவிற்கு பயனற்றதானது. பாராதைராய்டு சுரப்பியும் கூடுதல் வளர்ச்சியடைந்து உடலில் கால்சியம் முழுதும் குறைந்து போனதை ஊர்ஜிதம் செய்தது”நவீன அறிவியலின் ‘கண்டுபிடிப்பான’ சர்க்கரை சமூகத்தால் எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்கப்பட்டு - அதன் விலை உயர்த்தப்படின் அரசியலில் பூகம்பம் வெடிக்கும் அளவு - முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. இதன் உற்பத்தியை நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கொண்டாடும் அதேசமயம் அது இப்படியெல்லாம் பயங்கர கேடுகளை உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று காட்டும் நிரூபணங்களை “ஏமாற்று” என்று தூற்றுகின்றன. புகை பிடிப்பதைப் போலவே இதையும் “தவிர்க்க வேண்டிய” பட்டியலில் என்றோ நாம் சேர்த்திருக்க வேண்டும். முற்றாக நீக்க முடியாவிட்டாலும் விழிப்புணர்வையாவது இதற்கு எதிராக உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அது நடக்க வில்லை.


காரணம் நம்நாட்டில் சர்க்கரை உற்பத்தி - உடலுக்கு வளம் சேர்க்கும் மற்றொரு ‘நல்ல’ இனிப்பானாகிய கருப்பட்டி வெல்லத்தின் உற்பத்தியை முடக்கவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது.கருப்பட்டிவெல்லம் ஏன் சிறந்தது?தேனைத் தவிர நாம் கலாச்சாரரீதியிலும் நூற்றாண்டு கணக்கிலும் பனைவெல்லத்தையும் கருப்பட்டி வெல்லத்தையும் சேர்த்து வந்திருக்கிறோம். இவ்விரு இந்தியப் புராதன இனிப்பான்களிலும், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உண்டு. இவை சர்க்கரையில் இல்லாதவை. வெல்லத்தை பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்து பன்னூறாண்டுகளாக கடைபிடித்து வந்திருக்கிறோம். உடலுக்கு மிகவும் தேவையான மினரல்களும் வைட்டமின்களும் சேர்ந்தே கிடைக்கும் நல்ல பகுத்தெடுப்பு முறையை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் கருப்பட்டி வெல்லம் ஒரு “உணவு”. இப்படி நாம் வெள்ளைச் சர்க்கரையை அழைக்க முடியாது.நாம் கற்பனை செய்வதைவிட பிரச்னை மிக மோசமானது என்கிறார் சி.வி. சேஷாத்ரி.


குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின்கள்- உடலில் மருத்துவரீதியில் குணப்படுத்தமுடியாத அளவிற்கு- சர்க்கரை கரைப்பின்போது முற்றிலுமாக சூறையாடப்படுவது இன்றைய சமூகப் பிரச்சனை. பொது சுகாதாரத்திற்கு இதனால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய பல சந்ததிகள் ஆகலாம். உடலிலிருந்து சத்துக்களை சூறையாடும் ஒரு நச்சுப் பொருளை அதன் தீங்குகள் தெரியவரும் முன்னரே சமுதாயம் தனது அங்கமாக்கிவிட்டது. இந்த கவித்துவ சோகம் போதாதென்று பெண்களுக்கான நலத்திட்டங்களின் வழியே இரும்புச்சத்து மாத்திரைகளை இலவசமாகத் தரும் அடுத்த “வளர்ச்சி” அங்கத்தை தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். மரியாதைக்குரிய பெரிய நவீன பொருளாதார நாடுகளின் இப்போதைய நாகரீக அடையாளம் இதுதான். சர்வதேச மருந்து நிறுவனங்களின் துணையோடு வளர்ச்சி.1976ல் இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட புதிய அடிப்படை உரிமைகள் பற்றிய ஷரத்து, அரசாங்கம் உட்பட அனைத்து மக்களும் அறிவியல் ரீதியிலான சிந்தனைகளை வளர்க்கவும், கடைபிடிக்கவும் கோரியது. இதன்படி அரசுரீதியில் வெள்ளைச் சர்க்கரையின் உற்பத்தியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டு, கேடுகளற்ற கிழக்கத்திய அறிவியலின் கண்டுபிடிப்பான வெல்லத்தின் உற்பத்தியை- உற்பத்தி முறையிலிருந்த குறைபாடுகளை நீக்கி - ஊக்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் நேரெதிராக, வெல்லத்தை ஒழித்துக்கட்ட திட்டமிட்டே செயல்பட்ட அரசு - அராஜகத்தின் உச்சக்கட்டமாக 1932ல் சர்க்கரை உற்பத்திப் பாதுகாப்பிற்காக தனிச் சட்டமே இயற்றியது.


சொல்லப்பட்ட காரணம் - சர்க்கரையால் சந்தையில் வெல்லத்தோடு போட்டியிட முடியவில்லை என்பது. இப்போதும்கூட சர்க்கரை ஆலைகளைத் தவிர வேறு எத்தொழிலுக்கும் குறிப்பாக வெல்லம் தயாரிக்க- விவசாயிகள் கரும்பை விற்க முடியாது. (கரும்பை சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என்ற கரும்பு சாகுபடி கமிஷனரின் ஆணையை 1987ல் உச்ச நீதிமன்றம் ஆமோதித்துவிட்டது). தாராளவாத பொருளாதாரத்தின் குணம் இதுதான்.இதற்கெல்லாம் பிறகும் மக்களுக்கு வெல்லத்தின் மீதுள்ள பற்று குறையவில்லை. ஆனால் சர்க்கரையுடன் ஒப்பிட்டால் வெல்லத்தின் தனிநபர் உட்கொள்ளல் குறைந்து வருவது கவலை தருகிறது. 1977ல் 56% இருந்து வந்த அது இப்போது 40% என்றுள்ளது. “நவீனத் தொழில் நுட்பம் காட்டும் அத்தியாவசியப் பட்டியல் நம்மை தவறான அனுமானங்களை நோக்கி அடிக்கடி தள்ளிவிடுகின்றது” என்கிறார் சேஷாத்ரி.


மக்கள் தொழில் நடத்துவதை விடுத்து தொழில்நுட்பம் மக்களை பிடித்தாட்டுகிறது. இதன் தயாரிப்பு தொழில்நுட்பம் மிகப் பெரிய பிழிப்பான்களையும் கொதிகலன்களையும் நாட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திவிட்டது.இந்த பிரம்மாண்ட இயந்திரங்களை எப்போதும் இயங்கியபடி வைக்க மேலும் மேலும் நிலங்கள் கரும்பு சாகுபடிக்கு கீழே கொண்டு வரப்பட வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை உட்படுத்துகிறது. தற்போதைய விவசாய உற்பத்தியில் மிக விரைவில் மண்ணின் மொத்தத் தன்மையையும் மோசமாக உறிஞ்சி நாசமாக்கும் கரும்பை வேறுவழியின்றி ஏற்க இதன் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். எங்கு வேண்டுமாயினும் பிரச்னையின்றி ஏற்றிச் செல்லவும் கெட்டுப் போகாது வைக்கவும் முடியுமாதலால் அரசுக்கு சர்க்கரையை மிகச்சரியாக பிடித்துப் போயிற்று. தீபாவளி, ரமலான் பண்டிகை மாதங்களில் சந்தையில் சில கிலோ சர்க்கரையை கூடுதலாக விடுவித்தாலே போதும், வாக்கு வங்கிகளை அது அரசை நோக்கி இழுத்து வந்துவிடுகிறது.


கோடிக்கணக்கானோர் வேலைத் தேடி அலையும் ஒருநாட்டில், நூற்றுக்கணக்கான ஆட்களை ஆங்காங்கு வேலைக்கு அமர்த்தும் சிறுதொழிலான வெல்ல உற்பத்தியை கைவிட்டு வேலை வாய்ப்பை குறுக்கி எந்திரமயமாகிப் போன சர்க்கரைத் தொழிலை நாம் பின்பற்ற பிரத்யேக காரணம் எதுவுமே இல்லை.( வளர்ச்சியின் பிரதான நோக் கங்களில் ஒன்று வேலைவாய்ப்பு. மக்கள் நலம் என்பது ஒருவர் உழைத்துப் பெறும் கூலியையும் அவரது உழைப்புப் பயன்பாட்டையும் பொறுத்திருக்கிறது.)வெல்லம் தயாரிப்பதிலுள்ள சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஒன்றையொன்று சார்ந்தவை. தரமான சூளை இல்லாததால் எரிபொருள் விரயமும், பாக்டீரியா, என்ஸைம் பாதுகாப்பின் மையால் வெல்லத்தின் வியாபார பயன்பாட்டுக் காலமும் குறைவு (பதுக்கி வைத்து விற்க முடியாது). ஆனால் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிற- தானாகவே அணு உலைகளை கட்டுப்படுத்துகிற- தொழில் நுட்பத்தில் மிக “முன்னேறிய” நம் நாட்டின் விஞ்ஞானிகள் முயற்சித்தால் தரமான சூளைகளை உருவாக்கவும் வெல்லத்தின் பயன்பாட்டு காலத்தை உயர்த்தவும் முடியும்.


ஏ.எஸ்.ஆர்.டி.ஏ (அஸ்ட்ரா) எனும் பெங்களூரு அமைப்பு வெல்லம் தயாரிக்க ,வெப்பரீதியில் அதிக நற்பலன் தரும் ஒரு சூளையை கண்டுபிடித்துள்ளது. அரசியல்ரீதியில் இத்தகு ஆய்வுகளுக்கு ஆதரவில்லாதிருப்பதற்கு சர்க்கரை ஆலைக்கழிவிலிருந்து உற்பத்தியாகும் சாராயமும் அதனால் அரசுக்கு கிடைக்கும் உபரி வருமானமும் காரணம். சாராய சாம்ராஜ்யத்திற்கு துணை போகும் தொழில்நுட்பம் தான் வேண்டும். நம் புராதன முறையும் மக்கள் சுகாதாரமும் யாருக்கு வேண்டும்?.ரொட்டியும் பிரட்டும்:இயந்திர உற்பத்தியான வெள்ளை பிரட் நகரவாசிகளுக்கு அறிமுகமானதே. மைதா அல்லது பதப்படுத்தப்பட்ட மாவிலிருந்து பிரட் தயாரிப்பது, சர்க் கரை தயாரிப்பை பலவிதத்தில் ஒத்துள்ளது. உற்பத்தியின்போது சர்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்களை இழப்பதுபோன்றே முக்கிய இழப்புகள் வெள்ளை மைதா உற்பத்திமுறையிலும் நடக்கிறது.


வெல்லத்திற்கு நடந்தது போலவே இங்கும் பாரம்பரியத்தில் அதற்கு மாற்று இருந்தும் கூட அதனை முற்றிலும் கைவிட்டு விட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஏனெனில் முன்பே குறிப்பிட்டது போல “நவீன தொழில் நுட்பம் நம்மை அடிக்கடி தவறான அனுமானங்களை நோக்கித் தள்ளி விடுகிறது.”கோதுமையின் உட்பகுதியின் மேற்பரப்பில் கார்போஹைட்ரேட் தவிர பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும், தாதுக்களும் படிந்துள்ளன. ‘பதப்படுத் தல்’ கார்போஹைட்ரேட்டை தக்க வைக்கும் அதேசமயம் பெரும்பாலான பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமினை கை விடுகிறது. கோதுமை மணியின் உட் கருவில் கேடியமும் வெளிப்பரப்பில் காரீயமும் உள்ளன.


பதப்படுத்தல் கேடியத்தை தக்கவைத்து காரீயத்தை கைவிடுகிறது. நல்லனவற்றையெல்லாம் புறந்தள்ளி உடலுக்கு பெருந்தீங்கு இழைக்கக்கூடியவற்றை சேர்த்துக் கொள்ளும் அபத்தத்திற்கும் ஆபத்திற்கும் பெயர்தான் ‘பதப்படுத்தல்’.இறுதி மாவு நீண்டநாள் கெடாமல் இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் எண்ணைய்ச் சத்துக்களும் சேர்ந்தே இழக்கப்படுவதுதான். அதில் நார்ச் சத்தும் இல்லை. நார்ச்சத்தற்ற கூழ்மாவு பல்இடுக்குகளில் தங்கி சொத்தை ஆக்குகின்றது. இவ்வகை மாவு மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. பிரட் மிகவும் ருசியானதெனினும் அது பற்சொத்தையையும் பெருங்குடலில் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் சர்க்கரையைப் போல, செயற்கைக்கோள், வீடியோ, விமான நிலையம் போல வெள்ளை பிரட்டும் இந்த நவீன கலாச்சாரத்தின் மாபெரும் அடையாளம் ஆகும்.
பிரட் தயாரிப்பு தொழில்நுட்பம் அதன் சத்துக்களை சூறையாடுகிறதென அறிந்த பின் மேற்கத்திய உற்பத்தியாளர்கள் செயற்கை வைட்டமின்களை யும் தாதுக்களையும் சேர்க்கின்றனர். எனவே இப்போது நாம் ‘வைட்டமின் சேர்க்கப்பட்ட பிரட்டை’ பெறுகிறோம். முதலில் வைட்டமின்களையும் தாதுக்களையும் கோதுமையிலிருந்து சூறையாடிய தொழில்நுட்பம் பின்பு செயற்கையாக உற்பத்தி செய்து சேர்த்து விட்டு விளம்பரம் செய்து கொள்கிறது. பொலெஸின்ஸ்கி ஆய்வுப்படி கோதுமையை மாவாக்குவதில் “இந்திய முறையே” சரியானது. அவர் எழுதுகிறார்: 90% மாவுச்சத்தை கோதுமையில் பேணவைத்து பிரட் தயாரிப்பதே சரியான இலக்கு. இதைத் தான் இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களாக செய்து வந்துள்ளனர். குறைவாக பதப்படுத்தலுக்குள்ளான கோதுமை மாவு நீண்டநாட்களுக்கு கெடாமல் வைக்கப்பட சாத்தியமும் இல்லை.இதுபற்றி ருடொல்ப் பாலன்டைன் எழுதுகிறார்: 5% மட்டுமே மேல் உமி களையப்படும் கைகுத்தல் கோதுமை மாவிலிருந்து ஒரு ரொட்டியை பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் தொடர்ந்து தயாரிக்கவே செய்கின்றனர். நல்ல திடமானது மட்டுமல்ல எளிதில் ஜீரணமாவதும் கூட.அடிக்கடி மாவுமில்லுக்கு ரொட்டி (சப்பாத்தி) உணவாளர்கள் போகக் காரணம் அந்த மாவில் எண்ணைய்ச் சத்தும் இருப்பதால் அதை பலகாலம் வைத்து பாதுகாக்க முடியாது. அதனால் என்ன? எப்போதும் கெடாத பிரட் தயாரிப்பும் பதப்படுத்தப்பட்ட மைதாவும் இருக்கிறதே. ஆனால் எந்தச் சத்தும் இல்லை.


திட்டவாதியின் ஒருதலை பட்சமான பார்வை, சர்க்கரை ஆலைகளைப் போலவே கோதுமை பதப்படுத்தும் ஆலைகளும் இந்தியாவிற்கு நிறைய தேவையென எண்ண வைத்துள்ளது. அறிவார்ந்த சிந்தனைகள் வளரும் போது இதுபோன்ற வெற்றுவாதங்கள் எடுபடுவதில்லை. ஆனாலும் நவீனத் துவ வளர்ச்சி மீதான அடிமைச்சங்கிலி வினோதத்தன்மை கொண்டது. “யாரோ உயரதிகாரி ஒரு சர்வதேச நிறுவனத் \தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு கமிஷனும் வாங்கிவிட்டார் என்பதற்காகவே நாட்டிற்கு முற்றிலும் தேவையே இல்லாத தொழில்நுட்பம் ராட்சச வடிவில் வந்து இறங்கிவிடுகிறது''தொழில் வளர்ச்சியடைந்ததாலேயே உணவு அறிவியலிலும் அவர்களே சிறந்தவர்கள் என்று வடக்கு நாடுகள் குறித்து நமக்கு போலியான ஒரு பார்வை உண்டு.


உண்மையில் தொழில் ரீதியில் ஒரு நாடு முன்னேற முன்னேற அது இயற்கை உணவை விடுத்து, பதப்படுத்திய, செயற்கையான வேதிப் பொருட்களை கொண்ட உணவை அதிகம் பயன்படுத்துகிறது. வளர்ச்சி எனும் பெயரில் டின்களில் அடைக்கப்பட்ட ‘பழையதை’ உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தம் உணவைத் தாமே தயாரித்து உண்பதில் அங்கே விளக்க முடியாத வகை “வறுமை” தான் தாண்டவமாடுகிறது.ருடொல்ப் பாலன்டைன் அமெரிக்க உணவுமுறை மாட்டிறைச்சி, உப்பு, சர்க்கரை, செயற்கை வாசனைப்பொருட்கள் சார்ந்ததாகவும், எனவே வைட்டமின் ,தாதுக்கள், பிரதான அமிலத்தன்மைகள், தேவையான புரதங்கள் அற்றதாகவும் இருப்பதாக சாடுகிறார்.


கொழுப்புச்சத்து, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, உப்பு இதைத் தவிர வேறு எந்த சத்தும் சேராத உணவு முறை கொண்ட ஒரு “நவீன” நாட்டை எப்படி “வளர்ச்சி அடைந்து விட்ட” நாடு என்று அழைக்க முடியும்?இப்படியான வளர்ச்சியடைந்த சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கமாகவும் அடையாளமாகவும் திகழும் நுகர்வுப்பொருள் எது தெரியுமா? வாயுவேற்றப்பட்ட சர்க்கரை கரைத்த நிறமேறிய கரைசல். பெப்சி, கொக்கோ கோலா. குழந்தைகளும் இளைஞர்களும் எந்தப் பயனுமற்ற இந்த வண்ணக் கரைசலை லிட்டருக்கு ரூ.15 கொடுத்து குடித்துத் தள்ளுகிறார்கள். பசும்பாலை லிட்டருக்கு ரூ.6 அழுகிறார்கள். அப்படி சொல்வதும் கூட சரியில்லை. அதற்குப் பெயர்தானே வளர்ச்சி, முன்னேற்றம். ஆனால் இந்த மாதிரியான அதீத முட்டாள்தனத்தை அற்புத உணவு முறை அறிவியலாக எப்படி ஏற்பது?உணவு தயாரிப்பிற்கு அதீத ஞானம் தேவை.


இந்தியாவும் சீனாவும் அப்படி பார்த்தால் இதில் மிகவும் முன்னேறிய பகுத்தறிவு கொண்டவை. எவ்வகை காலநிலையிலும் சரியாக செரிமானம் ஆகும் உணவைத் தயாரிக்கும் கலைக்கு பெயர் போனவை. பண்டைய கலாச்சாரங்களிலிருந்து முளைத்த ஆகச்சரியான உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் நம்முடையது. அப்படிப்பார்த்தால் நாம் ஏற்கனவே வளர்ச்சி அடைந்துவிட்ட நாடுகளே. நம்மிடம் செயற்கைக்கோள்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் உணவு தயாரிப்பில் உணவு உண்ணும் முறையில் பாராட்டத் தகுந்த எந்த புதிய அறிவியல் விதியும் கேலி செய்ய முடியாத தொழில்நுட்பங்களை நாம் அடைந்துள்ளோம்.சோளம் போட்ட வெள்ளை பிரட்டை அடிப்படையாகக் கொண்டு தற்போது திட்டமிட்டு நடக்கும் மேற்கத்திய ஊடுருவல் வரவேற்கத்தக்கது அல்ல.


நமது பண்டைய - சுதேசிய தொழில் முறையை அழித்த மேற்கு இப்போது நமது ருசியை, உணவுத் தயாரிப்பை ‘வளர்ச்சி’ யின் பெயரில் ஒழித்துக் கட்ட வருகிறது. உடனடியாக “மாற்றப்படவேண்டிய” முக்கிய முதல் குறி? வேறொன்றுமல்ல. வெள்ளை வெளேரென வேகவைத்த அரிசி கேக். பூப்போல இருக்குமே... இன்னுமா புரியவில்லை...? இட்லிதான் அது.உயிரியல் தொழில்நுட்பமும் - இட்லியும்: சி. வி. சேஷாத்ரி இட்லியை பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: உலகிலேயே மிகுந்த திறமையோடும் வேதிநுட்பத்தோடும் உணவு தயாரிக்கும் மாபெரும் கேந்திரம் தெற்காசியாதான் என்பதை இந்திய அரசு உணரவில்லை என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சிறப்புண்டு. இட்லி அல்லது தோசையைப் போல, உலகின் எந்த மூலையிலும் அவைமாதிரி நொதித்த முறையில் தயாரிக்கப்படும் உணவே கிடையாது.தென்னிந்திய பதப்படுத்தல் முறை நுண்ணுயிரியலின் அதீத ஞானத்தை தன்னகத்தே கொண்டது. உணவு தயாரிப்பில் உலகிலேயே உயர்ந்த தொழில்நுட்பத்தை அது பயன்படுத்துகிறது.


வீட்டில் அன்றாட வாழ்க்கையியலின் எளிய நடைமுறையில் உண்மையில் தென்னிந்தியாவின் கலாச் சாரத்தோடு ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளதால் இட்லியை யாரும் அசைக்க முடியாது.இந்த புவிக்கோளின் எஜமானர்கள் தம் இந்திய நண்பர்களின் உதவியோடு இந்த தரமான உணவை அழித்தொழித்து நாட்டை மெக்சிகோ கோதுமையில் மூழ்கடிக்க முயன்றனர். அரசின் சத்துணவுப் புரட்சியின் அங்கமாக வெள்ளை பிரட் சேர்க்கப்பட்டது. பெரிய அளவில் பிரட் உற்பத்தியை பல இடங்களில் ஆலைகள் மேற்கொள்வதன் அர்த்தம் இதுதான். இதற்கு காரணம் உண்டு. ‘நவீன’ வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ‘அறிவியலால்’ இதற்கு மேலும் இட்லியின் தரத்தை உயர்த்த முடியாது. அது ’விற்பனை’ ரகசியங்கள் இல்லாதது. தெற்கே ஏறக் குறைய எல்லோருக்குமே ‘இட்லி’யின் உற்பத்தி முறை தெரியும்.எல்லாவகை பொருளாதாரப் பிரிவுகளும் அதை அனுபவித்து வருகின்றன. அது ஏழையின் உணவு மட்டுமே அல்ல.
ஒரு கணக்கெடுப்பின்படி சென்னையின் ஒரு குறிப்பிட்ட வீதியில் ஒரு லீனியர் கி.மீ.க்கு - நாளொன்றிற்கு 10,000 இட்லிகள் விற்பனையாகின்றன. தமிழ்நாடு முழுதும் ஏன் தென் இந்தியா முழுதும் நாளொன்றுக்கு விற்பனை ஆகும் இட்லியின் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள். இது இட்லி வியாபாரமாவதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது. வீட்டில் சமைக்கும் இட்லிகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியது அல்ல.டாக்டர் சேஷாத்ரி பிரட்டையும் இட்லியையும் ஒப்பிட்டு வெளியிட்ட அட்டவணை இட்லியே சத்து மதிப்பு அதிகம் கொண்டதென நிரூபித்தாலும் அது இட்லியின் சிறப்புகளை முழுதாக விளக்கிவிடவில்லை. உதாரணமாக பிரட்டில் நார்சத்துக்களே சுத்தமாக கிடையாது. இட்லியில் உண்டு. சத்துள்ளதாக்குவதற்காக வேதி மினரல்கள், வைட்டமின்கள் பிரட்டில் சேர்க்கப்படுகின்றன. இட்லி இயற்கையிலேயே அச்சத்துக்களை நற்பயன் பாக்டீரியாக்களிடமிருந்து பெறுகிறது. இட்லி பதப்படுத்தப்பட்ட இயற்கை உணவு. உளுந்தையும் அரிசியையும் ஊற வைக்கிறபோது நற்பயன் பாக்டீரியாக்களான லியுகனோஸ்டாக், லாக்டோபாசிலஸ், இலெப்ஸில்லா போன்றவை அவற்றோடு இணைந்து வினையூக்கிகளாக செயல்படுவதால் நொதித்தல் சத்துக்கள் கெடாமல் பாதுகாக்கிறது.ட்ரில்லியன் கணக்கான இந்த நற்பயன் பாக்டீரியாக்கள் சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் மனித ஆற்றலை உணவுவழி பலப்படுத்துகின்றன.


மேற்கத்திய பயிற்சி பெற்ற, மேற்கத்திய சார்பு இந்திய விஞ்ஞானிகளுக்கோ தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக இல்லந்தோறும் குடிகொண்ட உலகிலேயே தலை சிறந்த உணவு தயாரிப்பு முறையும் அதன் அருமையும் தெரியவில்லை. உயிரியல் தொழில்நுட்பம்... ஆஹா.. என்று அவர்களுக்கு ஏற்படும் புளகாங்கிதம் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் ஆய்வுக்கூடங்களில் நடப்பவைகளைக் கண்டுதான். இந்த வகை தொழில்நுட்பத்தில் வீட்டளவில் நாம் ஏற்கனவே மிகவும் திறன் படைத்தவர்களாகவும் - விஞ்ஞானரீதியில் ஆகச் சிறப்பான தொழில்நுட்பம் கொண்ட வர்களாகவும் இருப்பது மட்டுமல்ல.வெளிநாட்டு மையங்களிடமிருந்து இவ்விஷயங்களில் நாம் கற்க வேண்டியதும் எதுவும் இல்லை. முயற்சியும் மூலதனமும், பேராசை கொண்ட விஞ்ஞானிகளும் சர்வதேச நிறுவனங்களோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுபடும் இந்த வகை நடைமுறைக்கு நேரெதிராக பயன்படும் விதத்தில் நுண்ணுயிர் இயலின் நமது புராதனத் திறமைகளை சரியாகப் பயன்படுத்தி புதிய வகை மாதிரிகளை நாம் உருவாக்க முடியும்.

இந்திய அறிவியலே தென்னிந்திய இட்லி தயாராகும் நொதித்தல் முறையை அடிப்படையாகக் கொண்டு சுற்றிவரவேண்டும் என்று சொல்லவில்லை.
நமக்கிருக்கும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நொதித்தல் தொழில் நுட்பத்தின் எல்லா எல்லைகளையும் நாம் விரிவுபடுத்த முடியும் என்பதே. இப்போதுள்ள இந்திய அறிவியல் இட்லி தயாரிக்க எவ்விதத்திலும் உதவமுடியாதது மட்டுமல்ல சம்பந்தமே இல்லாததுமாக உள்ளது. அதை முயற்சி செய்யும் போதோ அந்த தயாரிப்பு முறையையே அழித்துவிடும் அபாயமும் கொண்டது.உண்மையில் விஞ்ஞானிகளின் தலையீட்டால் மிக எளிய தொழில்நுட்பங்களில் கூட தீர்வுகளைவிட பிரச்னைகளே அதிகமாயின. ஏ.எஸ்.டி.ஆர்.ஏ, கர்நாடகத்தில் ஏற்படுத்திய மண் அடுப்புகள், சூளைகளே இதற்கு சான்று. இந்திய அறிவியல் ஆய்வகம் தயாரித்த சூளை அற்புதமானது. பழங்கால ஆலைகளை ஒத்திருந்தது அது. அவைகளைவிட விரைவாக சமைத்ததோடு பாதியளவு எரிபொருளையே பயன்படுத்துகிறது. ஆனால் அஸ்டிரா சூளையோ முழுதும் ஆண்கள் பிரச்னையாகிவிட்டது.
கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட என்றே முயலப்பட்ட ஒரு திட்டம் அவர்களுக்குத் தெரிந்த கலையையும் அவர்களிடமிருந்து பிடுங்கி ஆண்களுக்கு வழங்கிவிட்டது.சூளா - மண் தவிட்டு அடுப்புகள் ஆற்றல் அளவீடுப்படி தரமற்றவை. நிலத்தடி எரிபொருள் தீரத்தீர விஞ்ஞானிகளின் கண்களுக்கு ‘சூளா’ அடுப்புகள் அற்புதங்களாக தெரிகின்றன. இட்லி தயாரிப்பதும் அவ்வகையிலான இன்னொரு விஷயம். இட்லியில் நவீன அறிவியல் தாக்கத்திற்கு உட்பட எதுவுமில்லை. அதுவே அதனை காப்பாற்றிவிடும். அது போன்றே வெல்லமும் எதிர்ப்புகளை மீறி காப்பாற்றப்பட்டது. வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும், ரொட்டிக்கும் பிரட்டுக்கும் இடையிலான யுத்தம் இருவேறு கலாச்சாரங்களுக்கு இருவேறு சிந்தனைகளுக்கு இருவேறு பழக்க முறைகளுக்கு இடையிலான யுத்தம்.
வெல்லம் மற்றும் வெள்ளைச் சர்க்கரையிலுள்ள சத்துக்கள்சத்துக்கள் வெல்லம்(100கிராம்) ` வெள்ளை சர்க்கரைபுரதம் 0.4 0தாது 0.6 0கார்போஹைட்ரேட் (கிராம்) 95 99(மாவுச்சத்து) கால்சியம் (மி.கிராம்) 80 0பாஸ்பரஸ்(மி.கிராம்) 40 0இரும்புச்சத்து (மி.கிராம்) 11.4 லேசாக தென்படுகிறதுகரோட்டின் (யு.ஜி) 16.8 0தையாடீன் (மி.கிராம்) 0.02 0ரிபோபிளாவின் (மி. கிராம்) 0.04 0நியாசின் (மி.கிராம்) 0.5 0ஆதாரம்: சி.வி.சேஷாத்ரி (The Sugar – Food- alchol) Nexus. எம்.சி.ஆர்.சி



தகவலுக்கு நன்றி

http://www.keetru.com/visai/oct07/natarajan.php
அன்புடன் மீன்துள்ளி செந்தில்

Thursday, July 17, 2008

இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் - கோமாளி

இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் - கோமாளி
------------------------------------------------------------------- ---------------------

இந்தியாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. ஆனால் அந்த விஷயத்தை அரசு மூடி மறைக்க வேண்டியதன் காரணம் என்ன என்று இது நாள் வரை எனக்குப் புரியாத மர்மமாகவே இருக்கிறது. எத்தனை பெரிய சாதனையை சர்வ சாதாரணமாக செய்துள்ளோம். யாருக்கும் இதைப் பற்றிய விழிப்புணர்ச்சியே இல்லை. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்தி பொது மக்களுக்கு இந்த அரிய பெரும் சாதனையினை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அரசு இதையெல்லாம் செய்யாமல் ரோடு போடுகிறேன், பாலம் கட்டுகிறேன் என்று தேவையற்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.
ஆமாம்.. 2001 இல் மூவாயிரம் பெட்டிமுதல் நான்காயிரம் பெட்டி வரை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியானவை இன்று இருபதாயிரம் பெட்டிகளாக இறக்குமதியாகின்றன. ஆம். ஷாம்பெயின் என்ற அற்புதம் தான் அது. பச்சைக்கலர் பாட்டிலில் ஜிகுஜிகுவென இருக்கும். பார்த்தாலே பரவசம் தான். அப்படி ஒரு அற்புதத்தை தயாரித்தவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யனும். ஆனால் பாருங்க நமீதாவுக்கு கோயில் கட்டப்போறதா சொல்றாங்க. என்ன ஒரு அக்கிரமம். அரசு இதையெல்லாம் கவனிக்க கூடாதா....
தமிழ் நாட்டில் நடந்த அற்புதம் ஒன்று இருக்கிறது. 2002 இல் 239 லட்சம் பெட்டிகளாக இருந்த மதுவென்னும் அற்புதத்தின் விற்பனை 2007 இல் 450 லட்சம் பெட்டிகளாக உயர்ந்து இருக்கிறது. இந்தச் சாதனையைக் பொது மக்கள் அறிய வெளியிடாமல் அரசு மெளனம் காப்பது தான் அதிசயமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த மது விற்பனை 15 கோடி பெட்டிகளாக உயர்ந்து இருப்பது கேட்பவர்களை உணர்ச்சி வசப்படச் செய்யக்கூடிய செய்தி ஆகும். இன்னுமொரு செய்தி இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் விற்பனையாகும் மதுவின் அளவு மற்ற மாநிலங்களில் விற்பனையாகும் மதுப் பெட்டிகளில் பாதி அளவு என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவில் வருடம் தோறும் 15 சதவீத வளர்ச்சி காண்கிறது மது விற்பனை.
இந்தியாவின் மக்கள் தொகையில் 21 சதவீதம் தான் மது குடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். 100 சதவீதமாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் உதவி செய்யும். உடனடியாக அரசாங்கம் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் 177 லட்சம் பெட்டிகள் பீரும், 144 லட்சம் பெட்டிகள் பிராந்தியும், 87 லட்சம் பெட்டிகள் ரம்மும், 33 லட்சம் பெட்டிகள் விஸ்கியும், 8 லட்சம் பெட்டிகள் ஜின்,வோட்கா மற்றும் ஒயினும் விற்பனை ஆகிறது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி ஆகும். 1983ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட டாஸ்மாக்கின் செயல்பாடுகள் முற்றிலும் சீர் குலைந்து கிடப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விற்பனையினை அதிகப்படுத்த செயல்பட வேண்டும். இதற்காக தனி வாரியம் அமைத்து விற்பனை அதிகரிக்க செய்தி தாள்களில் விளம்பரமாகவும், ஊரெங்கும் பிரச்சாரமும், விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களும் நடத்தி விற்பனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மற்ற கட்சிகள் தனது கட்சிக்காரர்களை இந்த விற்பனைக்கு ஊக்கம் கொடுக்குமாறு செய்தல் வேண்டும். ஆளும் அரசுக்கு உதவிக்கரம் நீட்டினால் பொது மக்களால் கொண்டாடப் படுவார்கள்.
இன்னும் சில விஷயங்களைச் செய்தால் மது விற்பனை அதிகரிக்கும். மதுவை உணவாக அங்கீகாரம் செய்தல் வேண்டும். பள்ளிகளில் மதிய உணவின் போது தண்ணீருக்குப் பதிலாக பீரைக் கொடுக்க வேண்டும். கல்லூரிகளில் பீர், பிராந்தி, விஸ்கி விற்க கடைகளைத் திறக்க வேண்டும். புனித இடங்களான கோவில், மசூதி மற்றும் சர்ச்சுகளில் நிரந்தரமாக கடைகளை இயங்கச் செய்தல் வேண்டும். அதுவுமின்றி ரேஷன் கடைகளிலும், பெட்ரோல் பங்குகளிலும் மது விற்பனைக் கடைகளைத் திறந்தால் விற்பனை பல மடங்கு எகிறும் என்பது என்னைப் போன்ற புள்ளியியலாளர்களின் கருத்தாகும்.
மருத்துவர்களிடம் பீர் குடித்தால் தான் உடல் நலத்திற்கு நல்லது என்று சிகிச்சை பெற வருபவர்களிடம் சொல்லி மருந்துக்குப் பதிலாக பீரையோ அல்லது பிராந்தியையோ அல்லது விஸ்கியினையோ அருந்தினால்தான் நல்லது என்று சொல்லி மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுக்குமாறு அறிவுருத்தப்பட வேண்டும்.
உலக ஆரோக்கிய நிறுவனத்திடம் பீர் குடிப்பதால் வரும் நன்மைகள் என்னென்ன வென்று அறிக்கை தயார் செய்யச் சொல்லி மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். அதற்கு இலவசமாக பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் நடிகர் நடிகைகளை விளம்பரப் படத்திற்கு நடிக்க வைக்க அரசு நடவடிககை எடுக்க வேண்டும். அப்படி நடிக்கும் நடிக நடிகைகளுக்கு இந்திய அரசு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
இதையெல்லாம் விட்டு விட்டு இந்திய அரசாங்கம் இன்று அணுக் கொள்கை அது இதுவென்று காலத்திற்கு ஒவ்வாதவற்றை செய்து வருவது இந்திய குடிமகன்களை வேதனை கொள்ளச் செய்வதாக இருக்கிறது.
எங்கும் குடிமகன்கள் நிறைந்து இருக்கும் பாரதமே நாளை வல்லரசாக உருவெடுக்கும் என்பதனை எவரும் மறந்து விடலாகாது. அப்படி மறந்தால் அது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே இருக்க இயலும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை.
குறிப்பு : ஒரு பீர் கேட்ட போது இரண்டு பீர் வாங்கினால் ஒரு சிப்ஸ் பாக்கெட் இலவசம் என்று சொல்லிய டாஸ்மாக்கின் விற்பனைப் பிரதிநிதியின் கடமை உணர்ச்சியின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை. யாராவது நடவடிக்கை எடுக்கணும் என்று கிளம்பினால் நான் சரண்டர். ஏதோ பொழைக்க எழுதிய கட்டுரை இது. என்னையும் செத்த பொழைக்க விட்டு விடுங்க..ப்ளீஸ்...
komaalee@gmail.com
தகவலுக்கு நன்றி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=50807171&format=html
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

பசுமைப் புரட்சியின் கதை



கட்டுரைத் தொடர்

பசுமைப் புரட்சியின் கதை சங்கீதா ஸ்ரீராம்


ஏற்கனவே வரிக் கொடுமைகளுக்கு ஆளாகி வலுவிழந்த விவசாயிகள், என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதுகூட இனி அவர்கள் கைகளில் இல்லை. தானியங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களை வகைவகையாய்க் கண்டறிந்து பயிர் செய்தவர்கள், இனித் தங்கள் உபயோகத்திற்காக அல்லாமல் ஆங்கிலேயருக்கு லாபம் ஈட்டித் தரும் பயிர்களை விளைவிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில்கூடப் பல வகையான உணவுப் பயிர்களையும் மற்ற உபயோகமுள்ள பயிர்களையும் சேர்த்துப் பயிரிட்டு, ஆரோக்கியமான விவசாயம் செய்துவந்த காலம் சென்று, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டு, பணப்பயிர் தோட்டங்களாக மாற்றியமைக்கும் பணி 18ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. பணப்பயிர் அறிமுகமாகி, நம் விவசாயிகளையும் விவசாயத்தையும் திசை திரும்பச் செய்த கதைகளைப் பொறுமையாகப் படித்துப் பார்த்தால், அவற்றுக்கும் பசுமைப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது விளங்கும்.
n n n
அபினி
முதன்முதலில் இங்கிலாந்துக்குத் தேநீர் அறிமுகமானது 1650களில்தான்.1 விலையுயர்ந்த, பணக்காரர்களின் பானம் என்று அறிமுகமாகி, நூறாண்டுகளில் படிப்படியாக அனைத்து மக்களும் விரும்பி அருந்தும் பானமாக மாறியது. முதலில், தேயிலை சீன நாட்டிலிருந்துதான் இறக்குமதியானது. இங்கிலாந்துக்கு வேண்டிய பொருள் சீனாவில். ஆனால், சீனாவுக்குத் தேவையான பொருள் ஆங்கிலேயரிடம் எதுவுமில்லாததால், தங்கக் கட்டிகளையும் வெள்ளிக் கட்டிகளையும் கொண்டே தேயிலையை வாங்கிவந்தது. எத்தனை காலந்தான் இப்படித் தங்களுடைய கருவூலத்தைத் தீர்த்துக்கொண்டிருப்பது என்றெண்ணிய ஆங்கிலேயருக்கு ஒரு யோசனை. சீனாவில் மெதுவாகப் பரவிவந்த அபினி போதை மருந்தை இந்தியாவின் வளமிக்க கங்கை முகத்துவாரத்தில் விளைவித்து, சீன மக்களை அதற்கு அடிமையாக்கி, அவர்களிடம் விற்று, அதற்கு மாற்றாகத் தேயிலையை வாங்கிக்கொள்வதுதான் அது.2 அப்போது தங்கள் வயப்பட்டிருந்த வங்காளத்தின் விவசாயிகளையெல்லாம் பலவந்தமாக அபினியைப் பயிர்செய்யவைத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. தங்கள் உணவுக்காகக் காய்கறிகள் விளைவிப்பதைக்கூடத் தடைசெய்து, ஒத்துழைக்க மறுத்த விவசாயிகளுக்குத் தண்டனைகளை அளித்தது. இவ்வாறெல்லாம் கிடைத்த அபினியை 1773ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலில் சீனாவில் கொண்டு இறக்கியது. விவசாயிகள் கம்பெனிக்கு ஒப்பந் தங்களின் மூலம் உறுதியளித்த எண்ணிக்கையைவிடக் குறைந்த ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது.
23 ஆண்டுகள்3 கழிந்து, சீனர்களெல்லாம் இந்தப் போதைக்கு அடிமையாகி, நாடே பாதிப்படைந்ததைக் கண்ட ஏகாதிபத்திய அரசுகூட, இதன் இறக்குமதிக்குத் தடை விதித்தது. இருந்தும் கள்ளத்தனமாகக் கடத்தியே அபினிக்கான சந்தையைத் தக்கவைத்துக்கொண்டனர் ஆங்கிலேயர். 1905-06இல், 6.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் அபினி பயிராகியிருந்தது. இதில் 4 லட்சம் ஆக்ராவிலும் வங்காளத்திலும் மட்டுமே இருந்தது.4
இண்டிகோ (அவுரி)
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்தான் மீண்டும் கையில் சிக்கினர்.5
உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின்மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் பரவலாக்கப்பட்டது!
வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி. லதூர், 1848இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது.... நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே கருதுகிறேன்."6
நிலைமை மிகவும் மோசமானதும் 1868ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்திசெய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது.7 பல இண்டிகோ தோட்டத்தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.
தேயிலை
ஆங்கிலேயர் இந்தியாவின் பிற பகுதிகளையும் கைப்பற்ற, தங்களுக்குத் தேவையான தேயிலையையும் இங்கேயே விளைவிக்கலாமே என்றெண்ணினர். 1835இல் அஸ்ஸாமில் முதல் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டு, மூன்றாண்டுகளில் லண்டனில் விற்பதற்கான முதல் இந்தியத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.8 ஆங்கிலேய அரசாங்கம் உருவாக்கிய தரிசு நில விதிகளின்படி, வடக்கிந்தியக் காடுகள் (குறைந்த பட்சம் 100 ஏக்கரும் அதிக பட்சம் 3,000 ஏக்கரும்) "தரிசு நிலம்" என்னும் பெயரில் 45 ஆண்டுகளுக்கு (வரிவிலக்குடன்) குத்தகைக்கு விடப்பட்டன. 9இவ்வளவு பணம் கொடுத்து ஆங்கிலேயரால் மட்டுமே இதனை வாங்க முடிந்தது. இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளில் பணிக்குச் சேர்க்கப்பட்ட விவசாயிகள் சந்தித்தக் கொடுமைகள், இண்டிகோ, அபினித் தோட்டங்களில் சந்தித்ததைவிட மிகப் பயங்கரமாக இருந்தன. விவசாயிகள் வாழ்நாள் அடிமைகளாக்கப்பட்டு, மிக மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து மடிந்தனர். 1905இல் 5 லட்சம் ஏக்கர் காடுகள் அழிந்து, தேயிலை எஸ்டேட்டுகளாக உருமாறி நின்றன!10
காப்பி
1690வரையில் அரேபிய மற்றும் அபிசினிய (இன்றைய எத்தியோப்பியா) நாடுகளில் மட்டுமே பயிராகிவந்தது காப்பி. அதன்பிறகு தேநீரைப் போலவே படிப்படியாக மக்களை அடிமையாக்கிய காப்பிக்கு உலகெங்கிலும் தேவை அதிகமாகியது. 1830இல் மைசூர் மாநிலத்தில் முதன்முதலில் காப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டு, 1846இல் தமிழ்நாட்டில் நீலகிரி மலையிலும் பயிர் செய்யப்பட்டது. ஆரம்ப காலங்களில் பயிர்செய்யப்பட்ட பெரும்பான்மையான காப்பியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சிறிதளவு இந்தியாவில் வசித்துவந்த ஐரோப்பியர்கள் மட்டும் அருந்தினர். பிறகு, 1900களில் தென்னிந்தியாவில் பிராமணர்களின் பானமாகக் காப்பி அறிமுகமானது. காப்பியும் அருந்துபவரைத் தனக்கு அடிமையாக்கும் காரணத்தால், ஆரம்ப காலங்களில் பழமைவாத பிராமணர்கள் இந்தப் பானத்தை மதுவுடன் ஒப்பிட்டு எதிர்த்துவந்தனர். "வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஏற்ற பானம்" என்று விளம்பரம் செய்து வெற்றி கண்ட கம்பெனிகள், இரகசியமாக அருந்தப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் பானம், கௌரவத்துக்குரிய ஒரு பானமாக உயரக் காரணமானார்கள்.11 படிப்படியாக, காப்பி உற்பத்தியில் 50% நம் நாட்டிலேயே விற்பனையும் ஆனது. 1895இல் 2.7 லட்சம் ஏக்கரில் பயிரான காப்பிப் பயிரானது12, இன்று கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் காட்டு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது!13
புகையிலை
400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புகையிலை என்னும் தாவரத்தைப் பற்றிய குறிப்பு எங்குமே இல்லை! முகலாய மன்னர்கள்தான் முதன்முதலில் இந்தப் போதைப் பொருளை உபயோகிக்கத் தொடங்கினர். 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பயிராகத் தொடங்கி, கோவா மூலம் போர்த்துக்கீசியரால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டிலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் காலகட்டம் வரையில், உடல்நலக்கேட்டின் காரணமாக, இங்கிலாந்திலும் இந்தியாவிலும் புகையிலையைப் பயிர்செய்வதற்கும் புகைபிடிப்பதற்கும் பலவகையான தடைகள் போடப்பட்டன; அபராதங்கள் விதிக்கப்பட்டன. அவையனைத்தையும் மீறி 1800ஆம் ஆண்டுக்கு மேல்தான் இவ்விரு நாட்டு மக்களிடமும் பிரபலமாகத் தொடங்கியது. 1905இல் இந்தியா முழுவதிலும் 11 லட்சம் ஏக்கரில் பயிரானது புகையிலை.14
n n n
மேலும், இங்கிலாந்தில் தொழிற்புரட்சியை அமோகமாகத் தொடங்கி ஆலைகளை நிறுவியதும் மக்களை இந்த ஆலைகளை இயக்கத் தயார்செய்ததும் "அடடா! இப்போது மூலப்பொருள் வேண்டுமே!" எனக் கூறிக்கொண்டே இந்தியா உட்படப் பல நாடுகளைத் திரும்பிப் பார்த்தது இங்கிலாந்து. இந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளின் பசியை ஆற்ற வேண்டி, கோடிக்கணக்கான ஏக்கர் உணவுப் பயிர் நிலங்களையும் காடுகளையும் வளைத்துப் போட்டு, ஏற்கனவே வியாபாரமான வாழ்க்கை முறையாம் விவசாயத்தை, இன்னும் தீவிரமான வியாபாரமாக மாற்றியது!
பருத்தி
எண்ணிலடங்கா வகைகளிலும் வண்ணங்களிலும் நெய்யப்பட்ட இந்தியப் பருத்தித் துணி, காலங்காலமாகவே இங்கிலாந்து உட்படப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இங்கிலாந்தில் பருத்தி விளையாததால், கம்பளியைக் கொண்டே அவர்கள் ஆடைகளைத் தயாரித்துவந்தனர். இதனால், இந்தியப் பருத்திக்கு அங்கு நல்ல மரியாதை இருந்துவந்தது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வேரூன்றியதும் தமக்கென ஆலைகளை உருவாக்கிக்கொண்டுவிட்ட பின், இனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை இறக்குமதி செய்வானேன் என்றெண்ணி, தங்கள் நாட்டில், இந்தியப் பருத்தித் துணி விற்பனைக்குத் தடை விதித்தனர். அதோடு நிற்காமல், தங்கள் ஆலைகளுக்குத் தேவையான பருத்தியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவும் முடிவுசெய்தனர். ஏற்கனவே, தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி ஆகிக் கொண்டிருந்தது.15
இந்தியாவில் காலங்காலமாக விளைந்த பருத்தி ரகங்களில் பெரும்பான்மையானவை, குட்டையான நாரைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இங்கிலாந்து ஆலைகள் நீள ரகப் பருத்திக்கு மட்டுமே ஏற்றவையாக இருந்தன. இதனால், 1830இலிருந்து ஆங்கிலேயர் தொடர்ந்து இந்தப் புதிய ரகத்தை இந்திய விவசாயிகளிடையே பரவலாக்க முயன்றனர். அதன் விளைவு என்ன என்பதை வோல்கர் அவரது அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்: "மிருதுவான ரகப் பருத்தியைப் பரவலாக்க, அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய சொரசொரப்பான ரகப் பருத்தியைப் பயிர் செய்வதைத் தடுக்கச் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகூட எடுத்துள்ளது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன. பார்க்கப் போனால், முன்பைவிட இன்னும் அதிகமாகவே விவசாயிகள் இந்திய ரகப் பருத்தியைப் பயிர் செய்கின்றனர். இதற்கான காரணங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீள ரகப் பருத்தியைவிட, நாட்டு ரகப் பருத்தி அதிக மகசூல் தந்து, விரைவிலேயே அறுவடைக்கு வந்து, அதிக வலிமையும் வாய்ந்ததாக இருக்கிறது."16
1860களில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் சமயத்தில், அமெரிக்காவிலிருந்து நீள ரகப் பருத்தியின் இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டதால், இந்தியாவில் அமெரிக்கப் பருத்தியைப் பயிர்செய்த விவசாயிகளுக்குப் பரிசுகளையும் பதக்கங்களையும் வாரி வழங்கி அவர்களை ஊக்குவித்தது அரசாங்கம். வருமானமும் பணமும் அதிகம் கிடைத்ததால், விவசாயிகளும் இந்த மாற்றத்துக்கு இணங்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஓய்ந்ததும் இந்தியப் பருத்தியின் தேவையும் அதனுடனே விலையும் சரிந்தது. ஏற்றுமதியை நம்பி, அதிக பராமரிப்புடன் குறைந்த விளைச்சல் தந்த நீள ரகப் பருத்தியைப் பயிர்செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், வரிப்பணத்தைக்கூடக் கட்ட இயலாத பருத்தி விவசாயிகள், கடன்காரர்களின் கைகளில் சிக்கிக் கொண்டு, அவர்கள் வலுவடையக் காரணமானார்கள். பிறகு இந்தியாவிலேயே பருத்தி ஆலைகள் பரவலாக நிறுவப்பட்டதும் மறுபடியும் இந்த நீள ரகப் பருத்திக்குத் தேவை அதிகரித்தது. விவசாயிகள், படிப்படியாகப் பாரம்பரிய குட்டை ரகங்களைப் பயிர்செய்வதைக் கைவிடத் தொடங்கினர்.
1841இல் கோவை ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்ந்த பரிசோதனையில், அமெரிக்க ரகப் பருத்தியைப் பூச்சி தாக்கிப் பயிரெல்லாம் அழிந்ததென்பதும் அருகிலேயே பயிரான இந்தியக் குட்டை ரகம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் செழிப்பாக விளைந்ததென்பதும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று.17
கரும்பு
வேத காலம் தொட்டு, இந்தியாவில் கரும்பு ஒரு முக்கியமான உணவுப் பொருளாக இருந்துவந்து, இங்கிருந்து உலகின் மற்ற நாடுகளுக்கெல்லாம் பரவியிருக்கிறது. இந்தியாவில் முக்கியமாக இரண்டு வகையான கரும்பு பயிரானது. இனிப்புத் தன்மை அதிகம் நிறைந்த, மெலிந்த வகைக் கரும்புப் பயிர் நீர்ப்பாசனத்துக்குத் தேவையே இல்லாமல் விளைச்சலைக் கொடுத்தது. அதிக அளவில் பயிரிடப்பட்ட இந்த வகை, வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்பட்டது. குறைந்த இனிப்புத் தன்மை வாய்ந்த, கெட்டியான கரும்பு வகை, மெலிந்த வகையைவிட அதிக விளைச்சல் கொடுத்தாலும் அதற்கு அதிக அளவில் நீர்ப்பாசனம் தேவையாக இருந்தது. இது கடித்துச் சுவைக்க மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது.18
லெதர் என்ற ஆங்கிலேயர் ஒருவர், நம் நாட்டு வகைக் கரும்பைப் பற்றிக் கூறுகையில் "மெட்ராஸ் மாகாணத்தில் தற்போது பயிராகும் கரும்பு, உலகிலேயே மிகச்சிறந்த ரகம் என்பதில் சந்தேகமேயில்லை" என்று புகழ்ந்து கூறியுள்ளார்.19 இப்படிப்பட்ட தரம் வாய்ந்த கரும்பு பயிரான இடங்களில், அதிக விளைச்சல் வேண்டும் என்கிற ஒரே காரணத்தினால், வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்ற மற்ற கெட்டியான ரகங்களைக் கொண்டுவந்து, நீர்ப்பாசனம் அதிக அளவில் தேவைப்பட்ட புதிய கலப்பு ரகங்களை அறிமுகப்படுத்தினர் ஆங்கிலேயர். 1940இல் 42 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரானது.20
தைல மரம்
1843இல் நீலகிரி மலைகளில் விறகுத் தேவைக்காக அறிமுகமாகி, பின்னர் காகித ஆலைகளில் மூலப் பொருளுக்காக விரைவில் வளரக்கூடிய மரமாக நாடெங்கும் பரவியது. தைல மரம் பயிர் செய்வதற்காகப் பல லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளும் உணவுப் பயிர்ப் பண்ணைகளும் அழிந்தன. சுழற்சி விவசாயத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்தனர்.21
இது போன்று ரப்பர், எண்ணெய் வித்துக்கள், வேர்க்கடலை, சணல் போன்ற மற்ற பயிர்களும் இவ்வாறே ஆங்கிலேய ஆலைகளுக்குத் தீனி போட நாடெங்கிலும் பரவலாகப் பயிர் செய்யப்பட்டன.

n n n
விளைவுகள்
'விவசாயம் என்றாலே, சந்தைக்காகத்தான்; பணம் பண்ணத்தான்' என்றாகியுள்ள இன்றைய சூழலில், இங்குக் கூறியுள்ள கதைகளில், ஆங்கிலேய ஆதிக்கம் என்ற ஒன்றை மட்டும் அகற்றிவிட்டால், நம்மில் பலருக்கு எல்லாமும் சரியாக இருப்பதாகத் தெரியலாம். ஆனால், இந்த மாற்றங்கள்தாம், நம் நாட்டு இன்றைய விவசாய நெருக்கடிக்கு அடித்தளமாக அமைந்தன என்கிற உண்மை, இனி வரும் கட்டுரைகளில் மேலும் தெளிவாக விளங்கும்.
இப்போதைக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், உணவுப் பயிர்களுக்குப் பதிலாக, அபினி போன்ற பணப்பயிர்களை விளைவித்து உணவு உற்பத்தி குறையத் தொடங்கியது. பணப்பயிரின் நிலப்பரப்பு 1900இல் 165 லட்சம் ஏக்கரிலிருந்து, 1930இல் 240 லட்சம் ஏக்கராக அதிகரித்தது.22 அதிலும், வளமான உணவுப்பயிர் நிலங்களைப் பணப்பயிருக்கு மாற்றி, லாபத்தை எவ்வளவு பெருக்கிக்கொள்ளலாம் என்கிறபடியெல்லாம் எண்ணிச் செயல்படத் தொடங்கினர். வோல்கர் கூறுவதைப் பாருங்கள்: "திரு. நிகல்சன் கூறுவதன்படி கோவையில், பத்தாயிரக்கணக்கான ஏக்கர் வளமான நிலத்தில், ஏக்கருக்கு ரூ.20 செலவில், ரூ.40 வருமானம் தரும் உணவுப் பயிரை விளைவிக்கிறார்கள். ஆனால், அதே நிலத்தில், ஏக்கருக்கு ரூ. 150வரை வருமானத்தை ஈட்டித் தரும் கரும்பு மற்றும் வாழை போன்ற பயிர்கள் அருமையாக விளையுமே."23
தங்கள் சொந்த உபயோகத்திற்காகவும் உள்ளூர்ச் சந்தைக்காகவும் பல பயிர்கள் ஒன்றாக விளைந்த நிலங்களை, இண்டிகோ போன்ற ஓரினப்பயிர் தோட்டங்களாக மாற்றி, அயல்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருந்து, நிலையாக இருந்த உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைகுலைக்கத் தொடங்கினர். மொத்த உற்பத்தியையும் வாங்கிக்கொள்வதாக வாக்களித்து, விவசாயிகளைக் கரும்புப் பயிருக்கு மாற்றிவிடும் சர்க்கரை ஆலை முதலாளிகள்; பின்னர் ஏமாற்றமடைந்த விவசாயிகள், அறுவடைக்குக்கூடக் காசில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரும்புப் பயிரை எரித்துத் தள்ளும் செய்தி, அடிக்கடி நம் செய்தித்தாள்களில் காண்கிறோமே, அதனுடைய தொடக்கந்தான் இது.
சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த விவசாயிகள், தேயிலை போன்ற பயிர்தோட்டத் தொழிலாளிகளாக மாறினர். காப்பி போன்ற அடிமையாக்கும் பானங்களையுங்கூட, மக்களின் கௌரவத்தை உயர்த்தும் பானமாகக் காட்டி, விளம்பரங்களின் மூலம் தனியாரின் லாபத்திற்காக மக்களை மயக்கும் தந்திரங்க ளெல்லாம் கண்டறியப்பட்டன. மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் பெரிய அளவுகளில் புழக்கத்தில் வந்தன.
பல நூற்றாண்டுகளாக நம் நாட்டு மண்ணுக்கும் இயற்கைச் சூழலுக்கும் ஏற்றவாறு விளைந்துவந்த குட்டை ரகப் பருத்தி போன்ற பயிர் வகைகள் அழிந்து, பெரிய ஆலைகளின் பசியை ஆற்றுவதற்கென அமெரிக்கப் பருத்தி போன்ற பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாம் ஒட்டுமொத்தமாக ஆலைகளுக்காக அமெரிக்க ரகப் பருத்திக்கு மாறியதிலிருந்துதான், இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தேவை அதிகரித்தது. இன்று, நம் நாட்டில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் கிட்டத்தட்ட 60%, வெறும் பருத்திப் பயிருக்கு மட்டுமேயான அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இதேபோல், ஆலைகளுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட கெட்டியான கரும்பு ரகம், காலங்காலமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலத்தடி நீரை உறிஞ்சி, தீர்க்கத் தொடங்கியது. உதாரணத்திற்கு, 1999ஆம் ஆண்டு, மஹாராஷ்டிர மாநிலத்தில் பயிர் செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பில், 2.5% மட்டுமே கரும்பு பயிரானது. ஆனால், அந்த மாநிலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட மொத்த நீர்ப்பாசனத்தில் 60% வெறும் கரும்புக்கு மட்டுமேயாம்!24
இதுமட்டுமல்லாது, ஏற்கனவே வலுவிழந்துவந்த விவசாயிக்குப் புதிய உத்திகளைக் கையாள உற்சாகம் குறைந்து, தன் விவசாய அறிவைத் தேக்கிக்கொள்ளத் தொடங்கினான். தமக்கும் பயிருக்கும் சிறிதும் தொடர்பே இல்லாத, அனுபவ அறிவு இல்லாத புதிய ஓரினப் பயிர்களை விளைவிக்கும் போக்கில், நம் பாரம்பரிய விவசாயத்திற்கே உரிய கலப்புப் பயிர், பாரம்பரிய விதைப் பாதுகாப்பு போன்ற பல சிறந்த உத்திகளையும் செயல்முறைகளையும் பற்றி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சேகரித்துவைத்திருந்த அறிவையும் சிறிது சிறிதாக மறந்துபோகத் தொடங்கினான். இந்தக் காரணங்களினால், பணப்பயிர் பயிரிட்ட விவசாய நிலமெல்லாம் தனது வளத்தையும் இழக்கத் தொடங்கியது. (விவரங்கள் பின்வரும் கட்டுரைகளில்)
மேற்கண்ட கதைகளில் அடிப்படை மாற்றங்களை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்தான் என்றாலும், இவை தீவிரமானதில் நம் விவசாயிக்கும் பெரும் பங்குண்டு. இதுவரையில் நம் பொருளாதாரம் எனும் இயந்திரம் இயங்குவதற்கு ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்ட பணம், விரைவாக நம் விவசாயிகளின் எசமானனாக மாறி, பணம் சம்பாதிக்கும் ஒரே காரணத்துக்காக ஆலைகளுக்கான பயிர்களை விளைவிக்கும் விபரீதப் பாதையில் அடியெடுத்து வைத்தான் விவசாயி.
உதவிய நூல்கள்
1. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 2122. Alvares, Claude Alphonso; Decolonising History; The Other India Press, Goa; 1980 / 1993 pg. 147.3. ibid; pg 147.4. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 848, 8515. ibid; pg.6696. MD. Afroz Alam; Champaran: Mantra for Non-violence; 1998; http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2907986.html7. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 6728. ibid; pg 2189. ibid; pg 21810. ibid; pg 24011. Venkatachalapathy, A.R.; In those days, there was no coffee; Yoda Press, New Delhi; 2006; 12. ibid; pg 37013. www.indiacoffee.org/coffeeregions/default.htm 14. ibid; pg 795-9715. Alvares, Claude Alphonso; Decolonising History; The Other India Press, Goa; 1980 / 1993; pg.137-816. Voelcker, John Augustus; Report on the Improvement of Indian Agriculture; 1893; pg. 255 17. Royles, Forbes; Culture and Commerce of Cotton in India; 1851; pg. 47318. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 935-619. Ibid; pg. 93520. Gandhi, M.P.; Problems of Sugar Industry in India; 1945; pg. 6221. R.M. Palanna; Eucalyptus in India; Conservator of Forests, Kanara Circle, Karnataka; 199622. Gandhi, M.K.; Food Shortage and Agriculture; pg. 13823. Voelcker, John Augustus; Report on the Improvement of Indian Agriculture; 1893; pg. 25424. Mungekar, Bhalchandra; A paradox in Maharashtra; Frontline, Volume.16 - Issue 26, Dec.11-24, 199925. Mukherjee, Anup; Some Thoughts on The Drain of Wealth: Colonial India and Imperial Britain; An essay in the World History Bulletin (WHB); 2004 (Vol. XX No1). World History Association (WHA), USA. l

தகவலுக்கு நன்றி

http://www.kalachuvadu.com/issue-99/page22.asp

அன்புடன்

மீன்துள்ளி செந்தில்

இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு - 2

கட்டுரைத்தொடர் 2
--------------------------
பசுமைப் புரட்சியின் கதை இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு சங்கீதா ஸ்ரீராம்
---------------------------------------------------------------------------------------------------
விவசாய வாழ்க்கைமுறை வியாபாரமாக மாறியதில் வலுவிழந்தது விவசாயிகள் மட்டுமல்ல. நம் பூமியும்தான். விவசாயக் கழிவுகளையும் மாட்டுச் சாண எருவையும் கொண்டு பூமியின் பசியை ஆற்றி, மழைநீரை கவனமாகச் சேகரித்து பூமியின் தாகத்தைத் தணித்து, மென்மையான கருவிகளைக் கொண்டு உழுது, அன்புடனும் அரவணைப்புடனும் பூமியைப் பாதுகாத்துவந்தான் பாரம்பரிய விவசாயி.
இதற்கு மாறாக, பாரம்பரிய வேளாண் அறிவியல் கோட்பாடுகளை மறந்து, அவற்றை மீறி, மண்ணுக்குப் போதிய உணவளிக்க இயலாமல் பட்டினி போட்டு, வன்மையான கருவிகளைக் கொண்டு பூமியைச் சிதைத்த கதையைக் கேளுங்கள். இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் நிகழ்வுகளுள் சில மட்டுமே இந்தியா முழுவதற்கும் பொதுவாகப் பொருந்தும். வேறு சில, இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழ்ந்தவை.
பயிர் சுழற்சி முறையின் அழிவு
இயற்கை வேளாண்மையின் உயிரினப்பன்மைக் கோட்பாட்டிலிருந்து விலகி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே பணப்பயிரை விளைவிக்கும் புதிய வழக்கம் முளைத்தது. இதனால் பயறு வகைகளைப் பயிரிடும் வழக்கத்திலிருந்து இந்திய விவசாயிகள் விலகத் தொடங்கினர். இந்தப் பயறு வகைகள் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் பொருத்தும் தன்மை கொண்டவை. இந்தப் போக்குக் குறித்து 1924இல் ஆல்பர்ட் ஹோவார்ட் இவ்வாறு கூறினார்: ". . . கிழக்குப் பஞ்சாபில். . . பணத்தைக் குவிக்கும் கோதுமை, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை ஏற்றுமதிக்காகப் பயிரிடத் தொடங்கியதிலிருந்து, மண் வளத்தைப் பாதுகாக்கும் பயறு வகைகளைப் பயிரிடுவதை விவசாயிகள் மறந்தே போய்விட்டனர்."1 ஆண்டு தோறும் ஒரே பயிர் விளைந்த மண் தனது வளத்தை இழக்கத் தொடங்கியது.
வெளிநாட்டுத் தாவரவினங்களின் அளவுக்கு மீறிய தேவைகள்
நமது உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்புக்கு ஒத்துவராத தாவரவகைகள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, முன்பு காணாத நோய்களும் பூச்சிகளும் கூடவே சேர்ந்து அறிமுகமாயின. (சென்ற கட்டுரையில் கூறப்பட்ட கோவை ஆராய்ச்சி நிலையத்தில் அயல்நாட்டுப் பயிரைப் பூச்சிதாக்கிய சம்பவத்தை நினைவுகூரவும்.) சில வகையான வெளிநாட்டுப் பயிர்கள் உள்ளூரில் நிலவிய உயிர்ச் சூழல் அமைப்பின் திறனுக்கு அப்பாற்பட்ட தேவைகளைக் கொண்டவையாக இருந்தன. உதாரணத்திற்கு, வறண்ட நிலத்தில் அதிக நீர்த் தேவையுள்ள (கெட்டியான கரும்பு போன்ற) பயிர்கள் பயிரிடப்பட்டன. இதற்காக, செயற்கையான நீர்ப்பாசன, வாய்க்கால் வசதிகளும் கொண்டுவரப்பட்டன. (இதன் விளைவுகளைப் பின்வரும் கட்டுரையில் பார்ப்போம்.)
எண்ணெய் வித்துக்களின் ஏற்றுமதி
நமது மண்ணிற்கு வளம் சேர்த்த பண்டங்களுள் முக்கியமானது எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்கு. எள், கடுகு, கடலை, பருத்தி போன்ற பல வகையான வித்துக்களிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்தெடுத்த பிறகு மிஞ்சியிருக்கும் சக்கையை மாட்டுக்குத் தீவனமாகக் கொடுத்தும், மண்ணில் கொட்டி உழுதும் ஊட்டச்சத்துக்களின் சம நிலையைப் பராமரித்தும் வந்தனர். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியான வேளாண் பண்டங்களுள் எண்ணெய் வித்துக்களுக்கு முக்கியமான இடம் உண்டு. "இங்கிலாந்தில் வசிக்கும் நாம், இந்த ஏற்றுமதி ஏற்பாட்டின் அனுகூலங்களை அனுபவிப்பதற்குத் தாமதம் செய்வதே இல்லை. நான் இந்தியா செல்லும் சமயம், வோபர்ன் ஆராய்ச்சிப் பண்ணையில் காளைகளுக்குத் தீவனமாகவும் பயிர்களுக்கு எருவாகவும் பிண்ணாக்கைப் பயன்படுத்தி வந்தேன். இவை பெரும்பாலும், இந்தியாவிலிருந்துதான் வந்திருக்கும்; இவை இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மண் வளத்துக்குச் சமமாகும்" என்று வோல்கர் கூறியுள்ளார்.2
மாலிசன் என்ற மற்றொரு வேளாண் விஞ்ஞானியின் அறிக்கையின் மூலம் வேறொரு உண்மையும் தெரியவருகிறது: "பாரம்பரிய இந்திய செக்குகள் கொடுக்கும் பிண்ணாக்கு, மிகவும் பொடியாக இருப்பதால் மண் வளத்தை அவை உடனடியாக உயர்த்தின; சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் லீஹ்பீக்ஷீணீuறீவீநீ ஷீவீறீ ஜீக்ஷீமீssகளிலிருந்து வெளியாகும் பிண்ணாக்குக்கு அத்தகைய தன்மை இல்லை."3
இரும்பாலான ஏரின் தாக்கம்
நமது பாரம்பரிய விவசாயக் கருவிகள் பெரும்பாலும் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தன. இதன் அனுகூலங்கள் மூன்று: விவசாயி, மற்றும் நிலத்தை உழும் எருது விரைவில் சோர்வடையவில்லை; மழை பெய்தவுடனேயே மண்ணை உழுவதற்கு ஏற்றதாக அமைந்தது மர ஏர் (இரும்பில் மண் ஒட்டிக்கொண்டு, உழவு வேலையைக் கடினமாகவும் தாமதமாகவும் ஆக்கியது); மண்ணை மேலோட்டமாகக் கீறிவிட்டு, மேல் மண் சேதமடையாமல் பாதுகாத்துவந்தது.
"இந்திய விவசாயி, இந்தப் புதிய கருவியை (இரும்பாலான ஏரை) உபயோகப்படுத்த மறுப்பதை, அவர்களின் 'அறியாமையால் வந்த தவறான எண்ணம்' என்றும் பலரும் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளையும் சூழ்நிலைகளையும் துல்லியமாகத் தீர விசாரித்ததில், நான் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டேன். இங்கிலாந்திலிருந்து இறக்கு மதியாகியிருக்கும் ஏரைக் கொண்டு மண்ணை உழுதால், அது வளமான மண்ணைச் சிதைத்து, நாசமாக்கி விடும்; பயிர் விளைச்சலைக் குறைத்து, நாட்டையே பஞ்சத்திற்குள் தள்ளிவிடும்" என்று ஆங்கிலேய வேளாண் விஞ்ஞானி வாலஸ் தனது அறிக்கையில் எச்சரிக்கை செய்தார்.4
n
வனங்களின் சேதம்
சாண எருவையே பெரிதும் நம்பியிருந்த நமது பூமிக்கு உணவளித்து, இந்திய விவசாயத்தின் மையமாக இருந்துவந்த பசுவுக்கும் உணவளித்தன நம் நாட்டு வனங்கள். இப்படி மண் வளத்தைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், மழை நீரையும் வாங்கிக்கொண்டு, தனது தழைப் படுகைகளிலும், மெல்லிய வேர்ப் பின்னல்களிலும் தக்கவைத்துக் கொண்டு, சிறிது சிறிதாகப் பூமிக்கு அளித்து பூமியின் தாகத்தையும் தணித்துவந்தன.
எங்கும் நிறைந்திருந்த வனங்களைக் கிராமத்து மக்களே பராமரித்துவந்தனர். வனங்களையும் பாதுகாத்து, அவற்றிலிருந்து விறகு, தேன், பழம், மூலிகை போன்ற தமக்குத் தேவையான பொருள்களை வனங்களைப் பாதிக்காத வகையில் எடுத்துக் கொண்டு, அவற்றோடு ஒரு அழகான உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். இங்கிருந்து சேகரித்த மரத்தைக் கொண்டு தங்களுடைய வீடுகளைக் கட்டிக்கொண்டும் விவசாயக் கருவிகளைச் செய்துகொண்டும் வாழ்ந்துவந்தனர். வனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் புனிதத்தன்மை கொண்டவையாகப் பாவித்துவந்தனர். சில வனப்பகுதிகளை "sacred groves"களாகவும் பாதுகாத்து வணங்கி வந்த கலாச்சாரம் அது.
தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, ஆங்கிலேய அரசு, 1800களில் வன மேலாண்மையைத் (உண்மையில் அதன் கட்டுப்பாட்டை) தன் கைகளில் எடுத்துக்கொண்டது. முதலில், கிராம மக்கள் வனங்களுக்குச் சென்று கால்நடைகளை மேய விடுவதற்கும் அவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. 1803இல் தான் முதலில் கடல் வர்த்தகத்துக்கான கப்பல்களைக் கட்டுவதற்காக, மலபார் தேக்கு மரங்களை "reserved" என்று அறிவித்து, வெட்டி வீழ்த்தினர். இப்படித் தங்கள் சொந்தத் தேவைகளுக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட காடுகளையே, நாம் இன்றும் "reserved forests" என்று அழைக்கிறோம்! பின்னர், படிப்படியாகக் கட்டடங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள் போன்ற பல்வகையான தேவைகளுக்கென மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.5 1866ஆம் ஆண்டு இந்திய அரசு வனத்துறையை நிறுவியது. இதற்கு முன்னரே வனங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டுவிட்டது என்று வோல்கரின் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.
வனத் துறை நிறுவப்பட்டபோது, விலை மதிப்புள்ள மரங்களடர்ந்த வனங்களைப் பாதுகாத்து, அதை வெட்டியெடுத்து ஆங்கிலேயருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இதனால் நமது வேளாண்மையும் அதன் அடிப்படையில் அமைந்த நமது கிராமியப் பொருளாதாரமும் கலாச்சாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதன் பல வகையான, பல தரப்பட்ட விளைவுகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.
சாண விரட்டிகளை எரித்தல்
காட்டில் சேகரித்த விறகுக்கட்டை கிடைக்காததால் மக்கள் மாட்டுச் சாணத்தை விரட்டியாகத் தட்டி எரிக்கத் தொடங்கினர். இவ்வாறு செய்ததனால், மண்ணுக்குப் போய்ச் சேர வேண்டிய எரு இல்லாமல், வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சியது.
"வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்னர், வனங்களும் மேய்ச்சல் நிலங்களும் ஏராளமாக இருந்தபோது, கால்நடைகளும் அதிகமாக இருந்த போது, எரிபொருளுக்குத் தேவையான விறகு மக்களுக்குக் கிடைத்த போது, விவசாய நிலங்களுக்குத் தேவையான எரு அதிகமாகவே கிடைத்துக்கொண்டிருந்தது." என்று வாலஸ், 1887இல் அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார். " . . . விவசாயிகளில் பெரும்பான்மையோர், அவர்களுக்கு வசதியிருந்தால், சாண விரட்டிகளை எரிக்கமாட்டார்கள். .... விறகு கிடைக்காமல் இருப்பதனால்தான் இவர்களுக்கு இந்த விரட்டிகள் தேவையாகியிருக்கின்றன. இவர்களுக்கு விறகுக் கட்டை மலிவாக, எளிதாகக் கிடைத்துவிட்டால், மண்ணுக்குச் சேர வேண்டிய எரு ஏராளமாகக் கிடைத்துவிடும். கோவை, சேலம், மதுரா, குஜராத், பாம்பே (மாகாணம்), நாதியாத், ஹோஸ்பெட், ஹோஷியார்பூர், முல்தான் போன்ற பல இடங்களில், எந்த விவசாயியும் ஒரு சிறிதளவு சாணத்தைக்கூட எரிபொருளாகப் பயன்படுத்துவதில்லை என்பதை நானே பார்வையிட்டு வந்துள்ளேன். சில இடங்களில், பாலைக் கொதிக்க வைப்பதற்காக மட்டும் சிறிதளவு எரிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணம் போன்ற விறகுப் பற்றாக்குறை உள்ள இடங்களில்தான், சாணத்தை எரிப்பது ஒரு பழக்கமாகியுள்ளது" என்று வோல்கர் குறிப்பிட்டுள்ளார்.6
தீவனப் பற்றாக்குறை
கால்நடைகளுக்கெனக் காலம் காலமாகப் பராமரித்துவந்த மேய்ச்சல் வனங்கள் தங்கள் கைகளை விட்டுச் சென்றதன் நேர் விளைவாகத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டது.
மழை அளவு குறைந்தது
மரங்கள் அழிய மழையும் குறைந்தது. வோல்கர் அவரது அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்: "முந்தைய நாள்களில் climate இப்போது உள்ளதைப் போன்று இருக்கவில்லை என்று பழைய அறிக்கைகள் மற்றும் வர்ணனைகளின் மூலம் தெரியவருகிறது. ஆனால் . . . கவனமில்லாமல், ஒட்டுமொத்தமாக வனங்களையும் மற்ற மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் . . . அழித்ததன் விளைவாக, climate இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. சர் வில்லியம் டென்னிசன், மதராஸின் ஆளுநராக இருந்தபோது, அவர் சில மாவட்டங்களைப் பார்வையிட்டபோது, வனங்கள் அழிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் மழையளவு குறைந்ததாகக் கூறுகிறார்".7
அதுவரை வனங்களிலிருந்து சேகரித்துவந்த பழங்கள், தேன் போன்ற உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போயின. அவர்கள் விவசாயக் கருவிகளைச் செய்துகொள்ளத் தேவையான மரம் கிடைக்காமல் போக, அவர்கள் வேலையும் தடைபட்டது. மரங்கள் அழிந்துபோக, வளமான மேல் மண்ணைக் காட்டு வெள்ளங்கள் அரிக்கத் தொடங்கின.
கால்நடை
"ஏம்மா, நேத்து காலைலேருந்து லட்சுமி எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா. சோந்து சோந்து படுத்துக்கறா. வைத்தியரக் கூப்பிட்டு அனுப்பினேனே, வந்து பாத்தாரா?" என்ற பேச்சு கிராமப்புறங்களில் சகஜமாக இடம் பெறும். இங்கு லட்சுமி என்று குறிப்பிடப்படுவது அவர்கள் வீட்டுப் பசு மாடு. வீட்டில் வசித்துவந்த பசு மாட்டைக் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து, அத்தனை அன்புடன் பாதுகாத்துவந்தார்கள் நம் முன்னோர்கள்.
தீவனம் கிடைக்காமல் மெலிந்து மாண்டுபோனது மட்டுமல்லாமல், கால்நடைகள் கூட்டாகக் கொல்லப்பட்ட விவரங்களைத் தொகுத்து திரு. தரம்பால் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார்.8 இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, 1750களில் தான் பசு வதை அரசாங்கத்தின் பொறுப்பில் நிகழத் தொடங்கியது. நம் நாட்டில் வசித்துவந்த ஆங்கிலேயர் உண்பதற்கான உலர்ந்த இறைச்சி உள்நாட்டிலேயே கிடைக்கத் தொடங்கிய காரணத்தால், அதன் இறக்குமதி 1760இல் நின்றதாம்.
1880 - 94இல் நிகழ்ந்த மாபெரும் பசு வதை எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டிசம்பர் 8, 1893இல் இராணி விக்டோரியா இவ்வாறு எழுதுகிறார்: "இஸ்லாமியர்களை எதிர்த்த போராட்டமாக இது தென்பட்டாலும், உண்மையில் அவர்களைவிடவும் மிக அதிக எண்ணிக்கையில் பசுக்களை வதை செய்யும் நம்மை எதிர்த்த போராட்டமே இது!" 1858இல் ஒரு லட்சம் ஆங்கிலேய இராணுவ வீரர்களுக்கும் அலுவலர்களுக்கும் மேலும் பல லட்சக்கணக்கான சிவில் அதிகாரிகளுக்கும் தினம் தினம் மாட்டிறைச்சியை வழங்குவதற்கெனத் தொடங்கப்பட்ட திட்டம் இது. மேலும், இராணுவப் பிரயாண மூட்டைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை நெடுந் தொலைவுகள் சுமந்து கொண்டு போவதற்காக, விவசாய நிலங்களை உழுதுகொண்டிருந்த எருதுகளை இழுத்து வந்தனர்.
நீர் வளங்கள் வற்றிப்போன கதையையும் புதிய கால்வாய்களால் விளைநிலங்கள் மலடான கதையையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
1. Howard, Albert, Crop Production in India: A critical survey of its problems, 1924, Pg. 37. 2. Voelcker, John Augustus, Report on the Improvement of Indian Agriculture, 1893, Pg. 106.3. Mollison, J., A Textbook on Indian Agriculture, 1901, Vol 1; pg.122-3.4. Wallace, Robert, India In 1888, Pg. 174-5.5. PPST-Madras Group, Indian Agriculture at the Turn of the Century; PPST Bulletin, Vol.2, No.1.6. Voelcker, John Augustus, Report on the Improvement of Indian Agriculture, 1893, Pg.100-101.7. Ibid., Pg. 30-310.8. Dharampal, Mukundan, T.M., The British Origin of Cow-Slaughter in India: with some British Documents on the Anti-Kine-Killing Movement 1880-1894, Society for Integrated Development of Himalayas, Mussoorie, July 2002.


தகவலுக்கு நன்றி
http://www.kalachuvadu.com/issue-101/page44.asp

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும் 1

கட்டுரைத்தொடர்
-------------------------
பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும் சங்கீதா ஸ்ரீராம்
------------------------------------------------------------------------------------

பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.
'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது பாரம்பரிய அறிவியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வோ கவனமோ இன்று அதிகம் காணப்படுவதில்லை. பஞ்சகவ்யம், குணபசலம், டாக்டர் ரிச்சாரியா (பசுமைப் புரட்சிக்கு முன்பு மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்) சேகரித்த பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் ஆகியவை இன்று விவசாயப் பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டுவருகின்றன. இவை தவிர, நாட்டின் ஒவ்வொரு பகுதியின் நிலைகளுக்கேற்ப விவசாயக் கருவிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம் பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுக்குச் சான்றாக விளங்குவதை ஏற்கனவே பார்த்தோம். நமது இந்தப் பாரம்பரிய அறிவியல், முக்கியமாக விவசாயத்தைப் பொறுத்தவரையில், நவீன அறிவியலிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இதை அறிந்துகொண்டால் மேலும் பல விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். பசுமைப் புரட்சி பற்றிய சில கேள்விகளுக்குத் தானாகவே விடைகள் கிடைத்துவிடும்.
இயற்கையின் விவசாயம்
யாருமே விதைகள் விதைக்காமல், எரு சேர்க்காமல், பூச்சிக்கொல்லி விஷங்கள் தெளிக்காமல், நீர் பாய்ச்சாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து, மண் வளத்தைக் குறைக்காமல் தழைத்து நிற்கின்றன காடுகள். நம் முன்னோர்கள் இந்தக் காடுகளிடம் பாடம் பயின்றவர்கள். அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரையில் உயர்ந்த வேளாண் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நிலைத்து நிற்கும் வேளாண்மையை வளர்த்தெடுத்துவந்தனர். இவற்றை விருட்சாயுர்வேதம் போன்ற நூல்களில் எழுதியும்வைத்தனர். இப்படிப்பட்ட அறிவுபெற்ற பாரம்பரிய விவசாயிகளைத் தன் பேராசிரியர்களாக ஏற்றுக்கொண்டு பாடங்கள் பயின்றவர், ஆல்பர்ட் ஹோவார்ட் என்ற ஆங்கிலேய வேளாண் விஞ்ஞானி.
பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பயின்று, இங்கிலாந்திலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஆராய்ச்சிப் பணிகளில் இருந்துவிட்டு, நம் நாட்டு விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைப் புகட்டுவதற்காக 1905இல் இந்தியாவில் வந்திறங்கினார் ஹோவார்ட். ஆனால், அவருடைய உண்மையான, அகங்காரமற்ற தேடல், அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. தன்னுடைய நவீன வேளாண் அறிவியல் பயிற்சியிலிருந்து விலகி, இந்திய விவசாயிகளிடமிருந்து வேளாண்மையைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் முடிவுசெய்தார்.
வனங்களையும் நமது பாரம்பரிய வேளாண் முறைகளையும் கூர்ந்து கவனித்துத் தான் கற்றதை 'இயற்கையின் விவசாயம்' என்றழைத்தார்; இந்தத் தலைமுறையினர் அதைப் புரிந்துகொள்ளும் வகையில் "An Agricultural Testament" 1 எனும் புத்தகமாக எழுதினார். இவர் காடுகளில் கவனித்த நான்கு முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகள்:
1. பலவகையான தாவரங்கள் ஒன்றாக வளர்கின்றன.
காடுகள் அதிகபட்சப் பல்லுயிர்த் தன்மை அல்லது உயிரினப் பன்மை (Bio-diversity) கொண்டவை. ஒவ்வொரு வகைத் தாவரமும் ஒருவகை ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு, மண்ணுக்குத் திரும்பத் தருகிறது என்பதால், மண்வளம் குறையாமல் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு வகையையும் வெவ்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்கும் என்பதால், பலவகையான தாவரங்கள் கலந்திருப்பதால், அவை எளிதில் பரவமாட்டா. இப்படி, உயிரினப் பன்மைகொண்ட உயிர்ச்சூழல் அமைப்பு, சரிவிலிருந்து மீண்டெழும் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கும்.
2. சூரியன், காற்று மற்றும் மழை ஆகிய மூன்றின் நேரடித் தாக்கத்திலிருந்து மண் எப்போதுமே பாதுகாக்கப்படுகின்றது.
மண் எப்போதுமே உதிர்ந்த இலைதழைகளைக்கொண்டு மூடப்பட்டிருக்கும். இதனால், மண்ணில் இருக்கும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகின்றது. மண் சூடாகாமல், அதில் உயிர்வாழும் நுண்ணுயிர்களுக்கேற்றபடி குளிர்ந்திருக்கும். மண்ணில் உள்ள கனிப்பொருள்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறாமலும் வளமான மேல்மண் அரித்துப்போகாமலும் உதிரியாக இருக்கும் மண் கெட்டியாகாமலும் பாதுகாக்கப்படும்.
3. காட்டு மரங்கள், தங்கள் கழிவுகளைக் கொண்டே தங்களுக்குத் தேவையான உரத்தைத் தயாரித்துக் கொள்கின்றன.
காட்டின் உயிர்ச்சூழல் (ecosystem) அமைப்பினுள் இருக்கும் சக்தியும் கனிப்பொருட்களும் இடைவிடாத சுழற்சி முறையில் இயங்கியபடி இருக்கும். இலை உதிர்ந்து, மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறி, சிதைந்து, ஊட்டச்சத்துகளாக மரங்களைச் சென்றடைந்து, புதிய இலைகளாக மாறுகின்றன. இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வெளியிலிருந்து சூரிய சக்தியை மட்டுமே எடுத்துக் கொண்டு, தமக்குத் தேவையான உணவை யாருடைய உதவியும் இல்லாமல், தாமாகவே தயாரித்துக் கொண்டுள்ளன.
4. தாவரங்களும் விலங்கினங்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கின்றன.
அந்தந்தச் சூழலுக்குத் தகுந்த தாவர வகைகள் வளர்ந்து, அதிகபட்ச மற்றும் நீடித்த வகையில் (bio-mass) தழைப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பில் வளரும் தாவர வகைகளை உண்ணும் சைவப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் அசைவப் பூச்சிகளும் கூடவே இருக்கும். பூச்சிகளை உட்கொள்ளும் தவளை இனங்களும் மீண்டும் அவற்றைத் தின்னும் பாம்புகளும் பாம்பை உண்ணும் பறவையும் இறந்த பறவையின் இறைச்சியைச் சிதைத்து ஊட்டச்சத்தாக மாற்றும் நுண்ணியிர்களும் அங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களையும் உயிர்ச் சூழலையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும் (பாடப் புத்தகத்தில் நாம் படித்திருக்கும் உணவுச் சங்கிலிதான் இது).
இந்த நான்கு கோட்பாடுகளையும் அடிப்படையாகக்கொண்டு, நம் விவசாயிகள் கீழ்க்காணும் முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள்.
அ) ஒரே தோட்டத்தில் பலவகையான பயிர்களைச் சேர்த்தே பயிரிட்டனர். பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றினர்.
ஆ) மண்ணின் மேல் மூடாக்குப் போட்டு, மண்ணைப் பாதுகாத்து விவசாயம் செய்தனர்.
இ) கால்நடைகளைக் காட்டில் மேயவிட்டு, விவசாயக் கழிவுகளை உணவாகக் கொடுத்து, மாட்டுச் சாணத்தை மண்ணில் சேர்த்து, ஊட்டச்சத்துகளை ஓயாமல் சுழற்சிசெய்து வந்தனர். 'அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு' எனும் பழமொழி இதற்கு ஆதாரம்.
ஈ) ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற பயிர்வகைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயிரிட்டனர்.
இந்த நான்கு முக்கியமான கோட்பாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், நமக்கு ஓர் உயிர்ச்சூழல் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். பாரம்பரிய அறிவியல் ஓர் அமைப்பை முழுமையாகப் (லீஷீறீவீstவீநீ ) பார்க்கிறது. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பை எடுத்துக்கொண்டால், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பார்க்காமல், அது முழுமையில் அங்கம் வகிக்கும் அமைப்பின் அடிப்படையிலேயே பார்க்கிறது. உதாரணத்திற்கு, ஒரு தாவர வகையின் செயல்முறை, அது இருக்கும் தோட்ட அமைப்பைச் சார்ந்தது. தோட்ட அமைப்பு, அந்தக் கிராமத்தின் அமைப்பைச் சார்ந்தது. அதாவது, அந்தப் பகுதியின் மண் வகை, தட்பவெப்ப நிலை, அங்கு வாழும் உயிரினங்கள், மழை அளவு, நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது. பிறகு அந்தப் பகுதி அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள்கூட, அந்தத் தோட்டத்தில் நடைபெறும் விவசாயத்தைப் பாதிக்கும். இப்படி எல்லா அம்சங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.
உயிர்ச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால், அதன் அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் அங்கங்கள் ஏதேனும் ஒன்றில் பிரச்சினை தென்பட்டாலும் அதை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கிய மின்மைக்கும் இயற்கையின் கோட்பாடு(கள்) ஏதேனும் மீறப்பட்டிருபதற்கும் அறிகுறியாகப் பார்ப்பது பாரம்பரிய அறிவியல். பிறகு, அந்தப் பிரச்சினையின் அடிப்படையை ஆராய்ந்து, அந்த அமைப்பின் சமநிலையை மீட்க அது வழிவகைகளைக் கண்டறியும்.
1913இல் ஜப்பானில் பிறந்த மசானோபு ஃபுகுவோகா என்பவர், நவீன வேளாண் அறிவியலில் அவர் காலத்தில் புதிதாக அறிமுகமாகியிருந்த நுண்ணுயிர் வேதியியலில் தேர்ச்சிபெற்று, விவசாயச் சுங்க ஆய்வாளராகப் (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ நீustஷீனீs வீஸீsஜீமீநீtஷீக்ஷீ) பணியாற்றினார். இருபத்தைந்து வயதாகும்போதே, நவீன அறிவியலின் அடிப்படை குறித்த ஐயங்கள் அவர் மனத்தில் எழுந்தன. சிக்கலான உயிர் வலையை நாம் புரிந்துகொண்டு, அதற்கான தரப்படுத் தப்பட்ட உலகளாவிய செயல்முறைகளை வடிவமைக்க முடியும் என்று எண்ணுவது அகங்காரம் கொண்ட, முட்டாள்தனமான எண்ணம் என்று ஃபுகுவோகா முடிவுசெய்தார். அவர் தன் வேலையை விட்டுவிட்டு, இயற்கையிடம் சரணடைந்தார். இருபதாண்டுகள் தன் பண்ணையில் இயற்கை விவசாயக் கோட்பாடுகளைப் பின்பற்றி, உலகே பார்த்து அசந்துபோகிற அளவுக்கு உற்பத்தியைக் கொடுக்கும் ஓர் உயிர்ச்சூழல் பண்ணையை வெற்றிகரமாக உருவாக்கித் தான் கூறியதை நிரூபித்துக்காட்டினார்.2
நவீன வேளாண் அறிவியலின் ஆரம்பம்
உயிர்ச்சூழல் அமைப்பை முழுமையாக அணுகும் பாரம்பரிய அறிவியலுக்கு முரணாக, ஓர் அமைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, பிரச்சினை தென்பட்டால், அதைத் தனியாகத் தீர்ப்பதுதான் நவீன அறிவியலின் அணுகுமுறை. இதைப் பகுதிகள் சார்ந்த எளிய, அல்லது பிளவுண்ட அணுகுமுறை (க்ஷீமீபீuநீtவீஷீஸீவீst / யீக்ஷீணீரீனீமீஸீtமீபீ ணீஜீஜீக்ஷீஷீணீநீலீ) எனலாம்.
நவீன வேளாண் அறிவியலின் வித்து, 19ஆம் நூற்றாண்டில் நவீன இரசாயனவியலில்தான் முதலில் முளைத்தது. 1800இல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, பருப்பொருள் குறித்த அணுக்கொள்கை (கிtஷீனீவீநீ நீஷீஸீநீமீஜீtவீஷீஸீ ஷீயீ னீணீttமீக்ஷீ) என்னும் விளக்கத்தின் எளிமை எல்லா விஞ்ஞானிகளையும் கவர்ந்தது. இனி, எல்லாப் பொருள்களையும் அணுவைக் கொண்டே விளக்கிவிடலாம் என்று கொண்டாடினர். 1813இல் ஹம்ஃப்ரே டேவி எனும் விஞ்ஞானி, மண்ணின் வளத்தை வேதியியல் சோதனையின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றார்.
1840இல் ஜஸ்டஸ் வான் லீபிக் எனும் விஞ்ஞானி, தாவரங்கள் தமக்குத் தேவையான கனிப்பொருள்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றன என்கிற 'தாவர ஊட்டச்சத்துக் கோட்பாட்'டினை விளக்கினார். ஒரு செடியை எரித்து, அதன் சாம்பலைப் பரிசோதித்தார். நைட்ரஜன் (ழி), பாஸ்பரஸ் (றி), பொட்டாசியம் (ரி) ஆகிய மூன்று முக்கியமான சத்துகள் போதிய அளவில் மண்ணில் இருந்துவிட்டால், செடிகள் நன்றாக வளர்ந்துவிடும் என்று முடிவுசெய்தார். இதைத்தான் 'ழிறிரி உரம்' என்கின்றனர். லீபிக்கைப் பொறுத்தவரையில், மண்ணின் மேல் இருக்கும் மக்கிய தழைப்பொருள், தாவர வளர்ச்சிக்கு உதவாத ஒன்று. சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாவர வளர்ச்சிக்குத் தேவையான மற்ற கனிமங்களையும் கண்டுபிடித்துக் காட்டியது நவீன விஞ்ஞானம். ". . . நீரையும் கனிப்பொருள்களையும் கொண்ட கல் துகள்கள் அடங்கிய சேமிப்புத் தொட்டிகளாகவே மண் பார்க்கப்படும். இதனை விவசாயிகள் உழுது கிளறிவிடுவார்கள்" என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர். அன்றிலி ருந்து இன்றுவரை, இந்த 'சேமிப்புத் தொட்டி மாதிரி'தான், நவீன வேளாண் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் அடிப்படையாக இருந்துவருகிறது.

மண் என்பது என்ன?
லீபிக்கின் கோட்பாட்டைச் சோதித்துப் பார்க்க ஓர் உதாரணம்: உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடர்த்தியான காடுகள் இருந்து வந்திருக்கின்றன. உலகிலேயே மிகவும் அதிக உற்பத்தி ஆற்றலுள்ள உயிர்ச்சூழல் அமைப்பு வெப்ப மண்டலக் காடுகள் என்பது அறிவியல் உண்மை. ஆனால், இந்தக் காடுகள் வளர்ந்து நிற்கும் ணீறீறீuஸ்வீணீறீ மண் வகையில் ஃபாஸ்பரஸ் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக, நவீன அறிவியல் ஆராய்ச்சி கூறுகின்றது. அந்த மண்ணுக்கு ஊட்டச் சத்துகளைப் பிடித்துவைத்துக்கொள்ளும் திறன்கூட இல்லாமல், மிக மோசமான தரத்தில் உள்ளது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், உயிருள்ள தாவரத் திசுக்களும் மண்ணில் விழுந்து மக்கிக்கொண்டிருக்கும் காய்ந்த இலை தழைகளும் ஒரு ஹெக்டேருக்கு 600 கிலோ ஃபாஸ்பரஸ் சத்துக் கொண்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மரங்கள் ஆயிரக்கணக்கான சிறு வேர்களை மேற்பகுதியிலேயே ஒரு பாயைப் போலப் படரவிட்டு, இந்தக் கழிவுகளிலிருந்தே நேரடியாகச் சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. அதாவது, இந்தத் தாவரங்கள் சூழலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலுக்கு ஏற்ற தாவர வகைகள் உருவாகி வளர்ந்துவருகின்றன.4
தாவரங்களுக்குத் தேவையான கனிமங்கள் பலவும் மண்ணிலிருந்து கிடைப்பது உண்மைதான். ஆனால், அவை எவ்வாறு கிடைக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய மூன்று கனிமங்களும் ஒளிச்சேர்க்கையின் (ஜீலீஷீtஷீsஹ்ஸீtலீமீsவீs) மூலம் செடிகளுக்குக் கிடைக்கின்றன. காற்று மண்டலத்தில் ஏராளமாக இருக்கும் (75%) நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உட்கொள்ளும் வடிவத்துக்கு நுண்ணுயிர்கள் மாற்றிக்கொடுக்கின்றன. பொட்டாசியம் மற்றும் குளோரினைத் தாவரங்கள் மண் கரைசலிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு, இறந்ததும் திரும்பத் தந்துவிடுகின்றனவாம். ஏனைய சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், இரும்புச் சத்து, சிங்க் போன்றவை நுண்ணுயிர் களின் உதவியால், தாய்ப் பாறைகளில் ஏற்படும் ஒருவித இரசாயன மாற்றத்தின் (சிலீமீறீணீtவீஷீஸீ) பலனால் வெளியாகின்றன. இந்தப் புரிதலின் அடிப்படையில் பார்த்தால், மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் அதி முக்கியமான பங்கை நுண்ணுயிர்கள்தான் வகிக்கின்றன. ஒரு கிராம் மண்ணில் 100 கோடி நுண்ணுயிர்கள்வரை இருக்கின்றனவாம். அப்படியென்றால், உயிருள்ள மண், சத்தமில்லாமல் இயங்கிவரும் ஒரு பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அதனை இயக்கி வரும் நுண்ணுயிர்த் தொழிலாளர்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்துவந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.5
பாரம்பரிய இந்திய விவசாயிக்கு இருந்த மண்ணைப் பற்றிய அறிவை, ஏ.ஓ. ஹ்யூம் தனது நூலில் கூறுவதை இங்கே காண்போம். "பூர்வீக விவசாயிகள், மண் வகைகளுக்கு வைத்திருக்கும் ஏராளமான பெயர்களைவிட அதிகச் சிக்கலானது வேறெதுவும் இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டமும் வேறெங்கும் அறியாத, தனக்கே உரிய ஒரு டசன் பெயர்களையாவது கூறி மகிழ்கிறது. இதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறந்த ஐரோப்பிய விவசாயிகளுக்கு இணையாக, மண் வகைகளின் நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றிய கூர்மையான அறிவு படைத்தவர்களாக உள்ளனர். மண் வகைகளின் பிரத்யேகமான பெயர்கள் ஒருபுறம் இருக்க, அவர்கள் தங்கள் நிலங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெயர்களை உபயோகிக்கின்றனர். அவை, சமீபத்தில் பயிர்செய்த காலம், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பயிர்செய்திருக்கிறார்கள் என்கிற விவரம், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு எவ்வளவு அருகில் உள்ளது எனும் விவரம், பழங்காலத்தில் உருவான மண்ணா அல்லது சமீபகாலத்தில் உருவான வண்டல் மண்ணா எனும் தகவல், மேய்ச்சல் நிலம், வயல்நிலம், அல்லது தோட்டமாக உள்ளதா போன்ற அத்தனை வெளிப்புற நிலைகளையும் விளக்குவதாக உள்ளன. மண்ணின் இயல்பைவிட இந்த வெளிப்புற நிலைகள்தான் விவசாய நிலத்தின் மதிப்பீட்டுக்கு உதவும்."6
பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையிலும் வேறுபாடு
லீபிக்குக்குப் பிறகு வந்த விஞ்ஞானிகள், தாவர வளர்ச்சிக்குத் தேவையான பற்பல அம்சங்களைக் கவனித்துவந்தனர். ஒவ்வொன்றாகத் தென்பட்ட மண்ணின் பௌதிகம், அதில் வாழும் நுண்ணுயிர்கள், ஆகியவற்றைத் தனித்தனியாக ஆராய்வதற்காக, மண் இயற்பியல், மண் நுண்ணியிரியியல் போன்ற தனித்தனித் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இயற்கை நிகழ்வுகளை இப்படிப் பகுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? ஒரு நெல் வயலில் இருக்கும் பல முக்கியமான குணாம் சங்களை மட்டும் பட்டியலிட்டு, ஃபுகுவோகா வரைந்த வரைபடத்தைப் பாருங்கள். காண்க படம்7.
இவற்றைத் தவிர, அந்த வயல் அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் நம் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் போன்றவைகூட, அந்த வயலின் நெல் விளைச்சலைப் பாதிக்கும். மேலும், இந்த ஒவ்வொரு குணாம்சமும் ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை எப்படித் தனித்தனியாகப் புரிந்துகொள்ள முடியும்?
விவசாய நிலத்தில் பிரச்சினை தென்பட்டால், நவீன மற்றும் பாரம்பரிய அறிவியலின் அணுகுமுறை எவ்வாறு வேறுபடும்? இதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
1. ஒரு தோட்டத்தில் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகள் அதிகமாகிவிட்டால், அதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதி, பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு அவற்றை நேரடியாகத் தாக்கிக் கொல்லும் வழியை நவீன அறிவியல் கடைபிடிக்கிறது. இந்தப் பூச்சிக்கொல்லிகளால் மண்புழுக்கள் மற்றும் சிலந்தி போன்ற நன்மைசெய்யும் பூச்சிகளும் கூடவே அழிந்துவிடுகின்றன. மேலும், பின்வரும் தலைமுறைகளைச் சேர்ந்த சைவப் பூச்சிகள் விஷத்துக்கான எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டு சாக மறுக்கின்றன.
பாரம்பரிய அறிவியல், பூச்சிப் பிரச்சினையை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கியமின்மையின் அறிகுறியாகப் பார்க்கும். உதாரணத்திற்கு, அந்தச் சூழலுக்குத் தகாத பயிர்கள் அங்கே பலவந்தமாகப் புகுத்தப்பட்டிருந்தாலோ ஓரினப் பயிர்முறை பின் பற்றப்பட்டிருந்தாலோ அல்லது மண்ணும் தாவரங்களும் வலுவிழந்திருந்து பூச்சி எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்தாலோ இத்தகைய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று பாரம்பரிய வேளாண் அறிவியல் கணிக்கிறது. இவற்றை அடிப்படையில் சரிசெய்யத் தேவையானவற்றை அது மேற்கொள்ளும்.
2. ஒரு மண் சத்திழந்து, தாவரங்கள் பசுமையாக வளராவிட்டால் நவீன அறிவியல், நைட்ரஜன் சத்தை மண்ணுக்கு ஊட்ட, யூரியாவை மண்ணில் சேர்க்கச் சொல்லும். இந்த உப்பின் சேர்க்கையால், மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் அழிந்து, இயற்கையாகக் கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய், மண் மலட்டுத்தன்மை அடைகிறது. மேலும், இதனால் செடியின் தண்டு உப்பிக்கொண்டு, தண்டு துளைப்பான் (stem borer) போன்ற பூச்சிகளைக் கவர்கின்றன.
பாரம்பரிய அறிவியல், வளமிழந்த மண்ணைச் சரிசெய்ய, கிடைக்கும் தழைப்பொருள்களைக் கொண்டு மண்ணை மூடிவைத்து, ஈரப்பதத்தைப் பாதுகாத்து நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கான சூழலை அமைத்துக்கொடுத்து, வளப்படுத்தும் பொறுப்பை அந்த நுண்ணுயிர்களின் கைகளில் ஒப்படைக்கும்.
இயற்கையின் மர்மம்
இயற்கையை ஓர் ஆய்வுக்கூடத்தில் அடைத்து, அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஃபுகுவோகா மட்டுமல்ல, வான் லீபிக்கூடத் தன் இறுதிக் காலத்தில் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்: "நம்மை உருவாக்கிய படைப்பாளியின் பேரறிவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன். அதற்கான தண்டனையையும் பெற்றுவிட்டேன். அவனுடைய வேலைப்பாட்டை மேம்படுத்த விரும்பினேன். இந்தப் பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் பிணைத்து இந்தப் பூமியை எப்போதும் புத்துயிருடன் விளங்கச்செய்யும் இயற்கை நியதிகளின் அற்புதமான சங்கிலியில் எதோ ஒரு வளையம் விட்டுப் போய்விட்டது என்று என்னுடைய குருட்டுத்தனத்தினால் நம்பினேன். பலவீனமான, சக்தியற்ற நான், விடுபட்டுப்போன அந்த வளையத்தை உருவாக்கிப் பொருத்த முயன்றேன் . . . மழை நீரைக்கொண்டு உருவாகும் ஒருவகை மண் கரைசலிலிருந்துதான் செடிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்கின்றன என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருந்தது. என் மனத்தினுள்ளும் இது ஆழமாகப் பதிந்தது. இந்தத் தவறான கருத்துதான் என்னுடைய முட்டாள் தனமான செயல்களுக்கெல்லாம் ஆரம்பம்."8
பாரம்பரிய அறிவியல், இயற்கையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி மனிதனுக்கு இல்லை என்றும் ஒவ்வோர் உயிரினத்தினுள்ளும் இருக்கும் ஒரு வகையான நுண்ணறிவுதான், அதன் வாழ்க்கையை இயக்குகிறது என்றும் நம்புகிறது.
NPK பற்றிய அறிவும் வேளாண்மையும்
"இவையெல்லாம் உண்மையாகவே இருந்தாலும்கூட, சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட ழிறிரி போன்ற கனிமப் பொருள்கள் பற்றிய அறிவு, இயற்கை விவசாயத்துக்கும் தேவையான ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்ற கேள்வி எழலாம். பயறு வகைகளைக் கொண்டு பயிர்ச் சுழற்சிசெய்வதன் மூலம், நைட்ரஜன் சத்தை நிலத்தில் பொருத்தும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன என்று நவீன அறிவியல் பயிர்ச் சுழற்சிக்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆனால், நமது பாரம்பரிய விவசாயி நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலே, பல நூற்றாண்டுகளாகப் பயிர்ச் சுழற்சி செய்துவந்திருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது? உள்ளுணர்வு மற்றும் அனுபவபூர்வமாக இந்த அறிவைச் சேகரித்து வந்திருக்கக்கூடும்.
இயற்கையுடனான உறவைத் துண்டித்துக்கொண்டுவிட்ட மக்களுக்கும் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களுக்கும் அறிவைப் பெறும் முறைகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மலைவாழ் மக்கள், செடிகளுடன் 'பேசும்' திறன் படைத்தவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது அவர்கள் செடிகளோடு ஒருவிதமான தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த, 800 புதிய ரகக் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை இயற்கையோடு கைகோர்த்துக்கொண்டு உருவாக்கிய, அமெரிக்கத் தாவரவியலாளர் லூதர் பர்பாங்க், தன் செடிகளுடன் தனக்கு இருந்த தகவல் பரிமாற்றங்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவர் பண்ணையில் பயிரிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உருளைக்கிழங்கு செடிகளுடன் 'உரையாடி', அவற்றுள் மிக எளிதாக 8 செடிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிலிருந்து இன்று உலகெங்கும் புழக்கத்தில் இருக்கும் பர்பாங்க் உருளையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.9
இவ்வாறு, நவீன மனம் நினைத்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத விதங்களில் அறிவைச் சேகரித்தது பாரம்பரிய மனம். நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலேயே, பயிர்ச் சுழற்சியைப் பின்பற்றியது. ஆனால், நம்முடைய நவீன மனத்தின் புரிதலுக்காகப் பாரம்பரிய அறிவியலைப் பற்றிய விளக்கங்களில்கூட நவீன அறிவியலின் கோட்பாடுகளையும் மொழியையும் கடன்வாங்க வேண்டியுள்ளது!
n
பாரம்பரிய வேளாண் அறிவியல் மதித்த இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகளை நாம் எப்போது, எவ்வாறு மீறத் தொடங்கினோம்? அவற்றுக்கும் பசுமைப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு என்ன? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
n
குறிப்பு: இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நவீன அறிவியல் என்பது, குறிப்பாக நவீன வேளாண் அறிவியலைப் பற்றியது மட்டுமேயாகும். நவீன அறிவியல் எனும் விசாலமான துறையில், பல தரப்பிலான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அத்துறை பற்றிய விரிவான விவாதத்தில் ஈடுபடுவதற்கான தகுதி எனக்கில்லை. அது இந்தக் கட்டுரையின் நோக்கமும் அல்ல.

1. Howard, A. (1943). An Agricultural Testament, Oxford University Press, London. http://journeytoforever.org/farm_library/howardAT/ATtoc.html
2. Fukuoka, M. (1993). The Natural Way of Farming: The Theory and Practice of Green Philosophy. Pg.65.
3. Jackson, M.G. (2005). The Ecological Village, Other India Press, Pg. 66-69.
4. Ibid. Pg.84.
5. Alvares, C. et al. (1999). The Organic Farming Reader, Other India Press, Pg. 100.
6. Hume, A.O. (1878). Agricultural Reform in India, Pg.4-5.
7. Fukuoka, M. (1993). The Natural Way of Farming: The Theory and Practisce of Green Philosophy, Pg. 51.
8. Liebig von, J. (1855). Die Grundsatze der Agriculturchemie mit Rucksicht auf die in England angestellten, Untersuchungen, Braunschweig.
9. http://en.wikipedia.org/wiki/Luther_Burbank


தகவலுக்கு நன்றி
http://www.kalachuvadu.com/issue-100/page18.asp

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்